![Sam Altman responds to Elon Musk bid for Open ai](http://image.nakkheeran.in/cdn/farfuture/GztIM5pSjJhAqXUeTF_Hx9h7hh9tHevWiEApfBgI_1w/1739363757/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_258.jpg)
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு அதற்கு எக்ஸ் என்று பெயர் மாற்றி தனது அதிரடி பதிவுகளால் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
இதனிடையே நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பிற்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். கைமேல் பலனாக ட்ரம்ப்பும் அதிபர் தேர்தலில் கமலா ஹரிஸை தோற்கடித்து வெற்றிபெற்று நாட்டின் அதிபரானார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DODGE) தலைவராக எலான் மஸ்க்கை ட்ரம்ப் நியமித்தார். இந்த குழு அரசின் தேவையற்ற செலவை கண்டுபிடித்து அதனை கட்டுப்படுத்தும் வேலையை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஓபன் ஏஐ(Open AI) நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்க முன்வந்துள்ளார். வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) தொழில் நுட்பத்துறையில் ஓபன் ஏஐ(Open AI) நிறுவனம் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாட்ஜிபிடி(ChatGPT) உள்ளிட்ட ஏஐ சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் இருந்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருந்து வந்தார். ஆனால் பின்பு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் இருந்து எலான் மஸ்க் விலகினார்.
இருப்பினும் ஓபன் ஏஐ நிறுவனம் லாபநோக்கற்ற செயல்பாடுகளில் இருந்து பாதை மாறிவிட்டதாக தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த எலான் மஸ்க், இதுதொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் 8 ஆண்டுகளுக்கு பிறகு எலான் மஸ்க்கும் அவர்து முதலீட்டாளர்கள் குழுவும் ஓபன் ஏஐ நிறுவனத்தை 9.74 பில்லியின் டாலருக்கு விலைக்கு வாங்க முன்வந்துள்ளனர். ஆனால் இதனை நிராகரித்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) சாம் ஆல்ட்மேன், வேண்டுமானால் எக்ஸ் நிறுவனத்தை 9.74 பில்லியின் டாலருக்கு நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.