Skip to main content

நெதர்லாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்!

Published on 19/12/2021 | Edited on 19/12/2021

 

General embargo again in the Netherlands!

 

பிரிட்டனில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், 'ஒமிக்ரான்' பரவலால் நெதர்லாந்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

 

'ஒமிக்ரான்' பரவல் காரணமாக நெதர்லாந்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் கரோனா ஐந்தாவது அலை பரவி வருகிறது. நாளுக்கு நாள் 'ஒமிக்ரான்' பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் வரும் ஜனவரி 14- ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

 

'ஒமிக்ரான்' பரவல் காரணமாக பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. உலகில் பல்வேறு நாடுகளிலும் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகவுள்ளது. 

 

'ஒமிக்ரான்' அச்சுறுத்தலால், உலகில் பல்வேறு நாடுகளும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

INDvsNED : நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Published on 12/11/2023 | Edited on 12/11/2023

 

IND vs NED : India wins by beating Netherlands

 

உலகக் கோப்பை தொடரின் 45 வது லீக் போட்டி இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 410 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 128 ரன்களை குவித்தார். கே.எல். ராகுல் 102 ரன்களும், ரோஹித் சர்மா 61 ரன்களும், கில், விராட் கோலி ஆகியோர் தலா 51 ரன்களும் எடுத்தனர்.

 

இந்த போட்டியில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 50 ஓவர் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கே.எல். ராகுல் 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 102 ரன் கள் எடுத்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதன்மூலம் நெதர்லாந்து அணிக்கு இந்திய அணி 411 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது.

 

இந்நிலையில் 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. பின்னர் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணி சார்பில் டேஜா நிடமனுரு 54 ரன்களும், சைப்ராண்ட் 45 ரன்களும், அக்கெர்மன் 35 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் பும்ரா, சிராஜ், குல்தீப், ரவிந்தர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர்.  128 ரன்களை குவித்த ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். லீக் சுற்று முடிவில் இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.