Skip to main content

சாலை ஓரத்தில் ஆபத்தான நிலையில் மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகள்!

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

Unsealed bore wells in dangerous condition on the side of the road!

 

மணப்பாறை சிறுவன் சுர்ஜித் ஆழமான ஆழ்குழாய் கிணறுக்குள் விழுந்து அரசாங்கமும் தனியார் மீட்புக் குழுவினரும் பல நாள் இரவு பகலாக போராடியும் கூட சிறுவனை சடலமாகவே மீட்க முடிந்தது. அதன் பிறகு பயனற்ற அனைத்து ஆழ்குழாய் கிணறுகளையும் பாதுகாப்பாக மூட உத்தரவிட்டது அப்போதைய அரசாங்கம். அரசு உத்தரவை நிறைவேற்றுவதாக கூறி அவசர கதியில் சணல் சாக்குகளையும், சிமெண்ட் சாக்குகளையும் கட்டி தற்காலிகமாக மூடிய அதிகாரிகள், அதனை பாதுகாப்பாக மூட மறந்தே போய்விட்டனர். இதனால் அலட்சியமாக மூடப்பட்ட ஆழமான ஆபத்தான ஆழ்குழாய் கிணறுகளில் மூடப்பட்டுள்ள சாக்குகள் தற்போது கிழிந்து ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. 

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தில் சேந்தன்குடி செல்லும் சாலை ஓரத்தில் குடியிருப்பு பகுதியில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்களின் குடிதண்ணீர் தேவைக்காக ஆழமான ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் அடிப்பம்பு அமைத்துள்ளனர். 

 

நிலத்தடி நீர் கீழே சென்றதால் பல வருடங்களாக தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் போனது. அதனால் அந்த அடிபம்பு பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பல வருடங்களாக பயன்படுத்தப்படாத அடிப்பம்பில் இருந்த கைபிடி, இரும்பு குழாய்கள் உள்ளிட்டவற்றை கழற்றிச் சென்றுள்ளனர். அதனை கழற்றிச் சென்றவர்கள் 6 அங்குலம் சுற்றளவுள்ள ஆழ்குழாய் கிணற்றை பாதுகாப்பாக மூடாமல் சென்று விட்டனர். 

 

இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது, "மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து உயிரிழந்த சம்வங்கள் நடந்த பிறகு, இது போன்ற பயன்பாடற்ற ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாப்பாக மூடி மழைநீர் சேகரிப்பிற்காக பயன்படுத்த வேண்டும். இப்படி மழைநீர் சேகரித்தால் நிலத்தடி நீர் உயரும் என்றும் அரசு உத்தரவிட்ட பிறகு பல இடங்களில் தற்காலிகமாக மூடினார்கள். 

 

ஒரு சில இடங்களில் மட்டுமே மழைநீர் சேகரிப்பிற்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் பல இடங்களில் இது வரை பாதுகாப்பற்ற ஆபத்தான முறையிலேயே ஆழ்குழாய் கிணறுகள் உள்ளது. அதில் ஒரு ஆபத்தான ஆழ்குழாய் கிணறு தான் பனசக்காட்டில் உள்ளது" என்றனர். 

 

இதே போல வம்பனில் இருந்து பொற்பனைக்கோட்டை செல்லும் வழியில் ஒரு ஆபத்தான திறந்த வெளியில் ஆழ்குழாய் கிணறு உள்ளது. ஏற்கனவே அவசரத்தில் சாக்கு வைத்து மூடிய பல ஆழ்குழாய் கிணறுகள் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. விரைவில் பாதுகாப்பாக மூடி மழைநீர் சேமிப்பிற்க்கு பயன்படுத்த வேண்டும் என்றனர்.

சார்ந்த செய்திகள்