Skip to main content

செந்தில் பாலாஜி திமுகவுக்கு போகமாட்டார்! சின்னம்மா உள்ளே இருப்பதால் டிடிவி பிறந்தநாள் கொண்டாட வில்லை!! தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி!

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
ta


கரூரைச் சேர்ந்த முன்னாள்  போக்குவரத்து துறை அமைச்சரான  செந்தில் பாலாஜி  டி.டிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.  இந்த நிலையில்  தான்  திடீரென டிடிவிக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  செந்தில் பாலாஜி திமுகவுக்கு  தாவப் போகிறார் என்ற பேச்சு  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   
இது சம்பந்தமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  கொள்கை பரப்புச் செயலாளரும்  டிடிவியின் தீவிர ஆதரவாளரான ஆண்டிபட்டி தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வனிடம் கேட்டபோது.... 

 

‘’சென்னை ஐகோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என தீர்ப்பு கூறியதை கண்டு துணைபொதுச்செயலாளர் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் அதிர்ச்சி அடைந்து விட்டோம். அதன்பின் துணை பொதுச் செயலாளரும் மேல்முறையீடு செய்யலாமா? வேண்டாமா? என எங்களிடம் கலந்து ஆலோசித்த பின்பு தான் மேல்முறையீடு வேண்டாம் எனக்கூறி தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.  அது தான் உண்மை. அப்படி  இருக்கும்போது செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்ய சொன்னதாகவும் அதை துணை பொது செயலாளர் அண்ணன் டிடிவி மறுத்ததாகவும்  அதனால அண்ணன் டிடிவி க்கும் செந்தில் பாலாஜிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவுக்கு போகப் போகிறார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

 

 அது தெரிந்து தான் நானும்  செந்தில் பாலாஜியிடம் செல் மூலம் தொடர்புகொண்டு கேட்டபோது அண்ணே அப்படியெல்லாம் இல்லை. தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.  '"நான் எப்பவும் அண்ணன் டிடிவி பக்கம்தான் இருப்பேனே தவிர திமுக பக்கம் எல்லாம் போக மாட்டேன் '"அப்படி ஒரு பொய்யான தகவல்களை யாரோ? பரப்பி வருகிறார்கள் என்று என்னிடம் அடித்து கூறினார்கள்.   

 


அது தான் உண்மை. அதுபோல் துணை பொதுச்செயலாளருக்கும் செந்தில்பாலாஜிக்கும்  ஏதோ  கருத்து வேறுபாட்டால் தான் அண்ணன் டிடிவி  பிறந்தநாள் கொண்டாடவில்லை என ஒரு  தகவல்களை பரப்பி வருகிறார்கள். அது உண்மை அல்ல. தற்பொழுது சின்னம்மா உள்ளே இருப்பதால் இந்த நேரத்தில் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது என்பதற்காகத்தான் துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி இந்த பிறந்தநாளை கொண்டாடவில்லை. அதோடு கட்சிப் பொறுப்பாளர்கள்  என்னை வாழ்த்த வரவேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

 

அதனாலதான் நாங்களும் போகவில்லை. அது தான் உண்மையே தவிர  மற்றபடி துணை பொதுச் செயலாளருக்கும் செந்தில் பாலாஜிக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அதுபோல் திமுக முன்னாள் அமைச்சர் ராஜாவுடன் செந்தில் பாலாஜியும் ஏர்போர்ட்டில் வருவது போல் ஒரு படம்  இணையதளத்தில் போட்டு இருக்கிறார்கள். அது இன்னைக்கு எடுத்த படம் அல்ல. அது பழைய படம் வேண்டும் என்றே பழைய படத்தை எடுத்துப்போட்டு ஒரு பொய்யான தகவல்களை இணைய தளத்தில் பரப்பி வருகிறார்கள். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில்  திமுக காங்கிரஸ் ஒரு அணியாகவும், அதிமுக பிஜேபி மற்றொரு அணியாகவும், மூன்றாவது அணியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தேர்தலில் போட்டி போடுமே தவிர அதிமுகவில் எல்லாம் இணைய மாட்டோம். அந்த பேச்சுக்கே இடமில்லை’’ என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசுக்கு சொந்தமான கோயிலை அபகரிக்க நினைக்கும் ஓ.பி.எஸ் குடும்பம்” - தங்கதமிழ்செல்வன்

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

"The OPS family wants to usurp the government-owned temple" - Thanga Tamilselvan

 

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் ஓ.பி.எஸ் குடும்பத்தினர் மற்றும் தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் நேற்று மாவட்ட ஆட்சியர் முரளீதரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

 

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த தங்கதமிழ்செல்வன், “இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியகுளம் கைலாசநாதர் கோயிலை, ஓ.பி.எஸ் குடும்பத்தினர் தங்கள் கோயிலாக நினைத்து கடந்த 20 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றி வந்தனர். தற்போது திமுக ஆட்சி நடைபெறுவதால் தனி நபர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என நிர்வாகத்திடம் வலியுறுத்தினோம். அதனை ஏற்க மறுத்து எங்களுடன் வாக்குவாதம் செய்தனர். 

 

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் நடத்தி வரும் அன்பர் பணிக்குழுவிற்கு அரசு அங்கீகாரம் ஏதும் இல்லாததால் அது கலைக்கப்பட வேண்டும். கார்த்திகை தீபத்தன்று முதல் தீபம் ஏற்றி வந்த கைலாசபட்டியில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் உரிமையைப் பறித்த ஓ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த 20 ஆண்டுகளாக தீபம் ஏற்றி வந்தனர். இந்த ஆண்டு எங்கள் முயற்சியால் அந்தச் சமுதாயத்தினருக்கு முதல் உரிமை வழங்கி தீபம் ஏற்ற வைத்தோம். 

 

அரசுக்கு சொந்தமான கோயிலில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருக்கு பரிவட்டம் கட்டாமல், இந்தக் கோயிலின் முன்னாள் பூசாரி நாகமுத்து கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓ.பி.எஸ்-ன் தம்பி ஓ.ராஜா, அவரது மகன் மற்றும் ஓ‌.பி.எஸ்-ன் மகனுக்கு பரிவட்டம் கட்டியது சமூகநீதி மீறும் செயலாகும். பெரியகுளம் எம்.எல்.ஏ. தலித் என்பதால் இது நடந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.

 

எம்.எல்.ஏ. சரவணகுமார் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அந்தக் கோயிலில் சமூகநீதி மறுக்கப்பட்டிருக்கிறது. அரசுக்குச் சொந்தமான கோயிலை ஓ.பி.எஸ் அதிகாரத்தால் தங்கள் சொந்தக் கோயில் என நினைத்து அபகரிக்க பார்க்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் மகன் கூறுவதைப் போல ரவுடிகளைக் கூட்டி வந்திருந்தால் தீபத்தை நாங்களே ஏற்றி இருப்போம். அந்த குருக்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் கொண்டு வரும் தீபத்தை ஏற்றுவதற்காக 15 நிமிடத்திற்கு மேல் காத்திருந்தார். 

 

முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் நிர்வகிக்கிற இந்தத் தமிழகத்தில் ஒரு சமூகநீதி மறுப்பு நிகழக்கூடாது என்பதால் தான் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறுகின்றோம். நிச்சயமாக அந்தக் கோயில் ஓ.பி.எஸ். குடும்பத்தின் கோவில் என்று இல்லாமல் பொதுக்கோவிலாக மாறும் போது மக்கள் தாராளமாகச் சென்று தரிசனம் செய்யும் நிலைமையை உருவாக்குவோம். தற்போது திமுக ஆட்சி நடக்கிறது என்பதை மறந்துவிட்டு, அரசு நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் அழைப்பிதழ் அச்சடித்துள்ளனர். கோவில் பூசாரியின் வேஷ்டியை சட்டமன்ற உறுப்பினர் பிடித்து இழுத்ததாக கூறுவது தவறான செய்தி. தவறி கீழே விழப் போனவரைத் தான் எம்.எல்.ஏ. பிடித்தார். 

 

இந்தக் கோயிலின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைவரையும் பணிமாறுதல் செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் அந்தக் கோயிலுக்குள் வராமல் தடுக்க முடியும். இந்தக் கோரிக்கையும் ஆட்சியரின் முன் வைத்துள்ளோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி நானும் பெரியகுளம் சட்டமன்ற  உறுப்பினர் சரவணகுமாரும் மனு கொடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் ‘இந்த வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்போம்’ என ஆட்சியர் உறுதி அளித்து இருக்கிறார்” என்று கூறினார்.

 

 

Next Story

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பதிவு செய்யாமல் சென்ற ஜீப்! திமுக வேட்பாளர் ஆய்வு

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

The jeep that went without registering inside the counting center Thanga Tamilselvan

 

வாக்கு எண்ணும் மையத்திற்குள் பதிவு செய்யாமல் ஒரு ஜீப் சென்று வந்ததால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று திமுக வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம், தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி கம்பவர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில், போடி திமுக வேட்பாளரும், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான சரவண குமார் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று (21.04.2021) வந்தனர். நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் நேற்று முன்தினம் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியின்றி ஒரு ஜீப் வந்து சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்த ஆவணங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட வேண்டும் என்று கோரினர். 

 

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் வாகனங்களின் எண்களைப் பதிவு செய்து, அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே உள்ளே அனுப்ப வேண்டும் என்றும், பதிவு செய்யாமல் வாகனங்களை அனுப்பி உள்ளதாகவும் அவர்கள் கூறினர். அப்பொழுது அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் முத்துராஜ், சையத் பாபு ஆகியோரிடம் தங்க தமிழ்ச்செல்வன் முறையிட்டார். பின்னர் ஆவணங்களை சரி பார்த்தார். அப்போது சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் கடந்த 13ஆம் தேதி இரண்டு போலீஸ் ஜீப்புகள் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டு, மீண்டும் அங்கு வந்தது தெரியவந்தது. 

 

அதில் ஒரு ஜீப் வெளியே சென்று வந்தது தொடர்பாக ஆவணங்களில் முறையாக பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த போலீஸ் ஜீப் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு உணவு விநியோகம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அதற்கு முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு  ஏற்பாடுகளை திமுக வேட்பாளர்கள் பார்வையிட்டனர். 

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், “கடந்த 13ஆம் தேதி பதிவு செய்யாமல் ஒரு ஜீப் வெளியே சென்று வந்துள்ளது. இங்கு வந்து செல்லும் அனைத்து வாகனங்களின் எண்களையும் பதிவு செய்ய வேண்டும். அனுமதி பெறாத வாகனங்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற பாதுகாப்பு குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும். போடி சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே 96 தகரப் பெட்டிகள் உள்ளன.

 

அதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டபோது, அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக அந்தப் பெட்டிகள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவற்றை தனியாக ஒரு அறையில் வைத்து, அதனை நோக்கி 2 சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அவற்றை கட்டுப்பாட்டு அறையில் இருந்து பார்வையிட ஏற்பாடுகள் செய்வதாக தேர்தல் அதிகாரிகள் உறுதி அளித்தனர்” என்று கூறினார்.