சிறுமி கலைவாணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பிளஸ் 2 மாணவனான கிருபானந்தன், போதிய ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், நீதி கேட்டு போராட்டம் என்று தமிழ்நாடு மருத்துவர் சமுதாயப் பேரவை அறிவித்துள்ள நிலையில், இன்று (9-ஆம் தேதி) தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை அடைத்து, அச்சமுதாய மக்கள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் – வடமதுரையை அடுத்துள்ள குரும்பபட்டியில் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார் வெங்கடாசலம். இவரது 12 வயது மகள் கலைவாணி வீட்டில் தனியாக இருந்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் (வயது 19), பாலியல் வன்கொடுமை செய்து, மின்சாரத்தை பாய்ச்சி, கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு கைதானார்.
இவ்வழக்கு, திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் 35 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரமில்லை என்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வழக்கிற்கு தேவையான வலுவான ஆதாரங்களை மகிளா நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அரசு பணியாளர்கள், தங்களின் கடமையை சரிவர ஆற்றவில்லை என்பதே, இவர்களின் ஆதங்கமாக உள்ளது. தமிழக அரசு, இந்த வழக்கில் தகுந்த நீதி கிடைப்பதற்கு உயர்நீதி மன்றத்தை நாட வேண்டும் என்பதே, இப்போராட்டத்தின் நோக்கமாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.