Skip to main content

எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் மரக்கன்று நட போலீசார் தடை; சேலத்தில் பரபரப்பு!

Published on 12/11/2018 | Edited on 12/11/2018
e

 

சேலம் அருகே, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆட்சேபனைக்குரிய பகுதியில் மரக்கன்று நட முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ்  வரும் இந்த சாலை மொத்தம் 277.3 கி.மீ. நீளத்துக்கு அமைகிறது.   இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் துரித கதியில் நடந்து வந்தன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலங்கள், ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமானதாகும். 

 

e2


பசுமைவழிச்சாலை திட்டத்தால் மரங்களும், விளைநிலங்களும் அழிக்கப்படுவதால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசோ, இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசுக்கு தொடர்ந்து முட்டு கொடுத்து வருகிறது.


இதற்கிடையே ஒரு தரப்பினர், திட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தற்போது அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. வழக்கு முடியும் வரை எட்டு வழிச்சாலைக்கான பணிகளை நிறுத்தி வைக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதை கிஞ்சித்தும் சட்டை செய்யாத தமிழக வனத்துறை, மஞ்சவாடி கணவாய் பகுதியில் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக அங்கிருந்த 128 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியது. 


இச்செயலுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர்நீதிமன்றம், மரம்வெட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் இணையாக பத்து புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 


ஆனால் மரம் வெட்டிகளோ, உடந்தையாக இருந்த வனத்துறையினரோ உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இதுவரை மசியவில்லை.  


இந்நிலையில், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் எட்டு வழிச்சாலைக்காக எங்கெங்கெல்லாம் மரங்கள் வெட்டப்பட்டனவோ, அங்கெல்லாம் புதிய மரக்கன்றுகளை நடுவதென முடிவெடுத்தனர். அதன்படி, சேலத்தை அடுத்த ஏரிக்காடு பகுதியில் மாரியம்மன் கோயில் அருகே, மரக்கன்றுகளை நடுவதற்காக சனிக்கிழமை (10.11.2018) காலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடினர். 


இதுகுறித்து முன்பே தகவல் கசிந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏடிஎஸ்பி சுரேஷ்குமார், டிஎஸ்பிக்கள் அண்ணாமலை, சூரியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்பட நூறுக்கும் மேற்பட்ட போலீசார் நிகழ்விடத்தில் குவி க்கப்பட்டனர். மக்கள் ஏதேனும் அத்துமீறினால் அவர்களைக் கைது செய்யும் திட்டத்துடன் தயார் நிலையில் வந்திருந்தனர். 

 

e3


ஏரிக்காடு மாரியம்மன் கோயில் பகுதியில் மரக்கன்று நடுவதாகச் சொல்லப்பட்ட இடம் எட்டு வழிச்சாலைக்காக அளவீடு செய்யப்பட்ட இடம் என்பதால், அந்த இடத்தில் மரக்கன்று நட அனுமதிக்க முடியாது என போலீசார் கூறினர். வாழப்பாடி தாசில்தார் வள்ளிதேவி, ஆர்ஐ சரஸ்வதி ஆகியோரும் அனுமதிக்க மறுத்தனர். 


இதனால் கொதிப்படைந்த விவசாயிகள், ஏரிக்காடு பகுதியில் திடீரென்று அதிகாரிகளைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 


அப்போது அவர்கள், ''மரங்களை வெட்டியவர்களை விட்டு விடுகிறீர்கள். உலகம் செழிப்பதற்கு மரக்கன்று நட்டு பராமரிக்க வந்திருக்கும் எங்களை சட்டத்தைக் காட்டி தடுப்பது நியாயமா? புறம்போக்கு நிலத்தில் மரக்கன்று நடுவதற்கு யாரிடமும் அனுமதி பெறத்தேவை இல்லை. சுதந்திர நாட்டில் மரக்கன்று நடுவதற்குக்கூட உரிமை இல்லையா?,'' என்றெல்லாம் கேள்வி எழுப்பினர்.


இதற்கிடையே, மரம் நட தீர்மானிக்கப்பட்ட கோயிலின் தர்மகர்த்தாவை அழைத்து வந்த போலீசார், அந்த இடத்தில் மரக்கன்று நட அனுமதிக்கக் கூடாது என்று நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார். அதற்கு முதல் நாள் இரவு, அந்த இடத்தில் மரக்கன்று நட அனுமதிப்பதாக ஊர் மக்களிடம் ஒப்புக்கொண்டிருந்த தர்மகர்த்தா போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து, சாலை மறியலின்போது திடீரென்று பல்டி அடித்தார். 


தொடர்ந்து அதிகாரிகள், போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தி, கலைந்து செல்லும்படி மன்றாடினர். பின்னர், மூன்று நாள்கள் அவகாசம் தரும்படியும், அதற்குள் மரக்கன்று நடுவதற்கான இடத்தை தேர்வு செய்து, அனுமதி வழங்கப்படும் என்றும் போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கூறினர். இதை ஏற்றுக்கொண்ட விவசாயிகளும், பொதுமக்களும் சாலை மறியலைக் கைவிட்டனர். 


இதையடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த மரக்கன்றுகளை மறியல் நடந்த பகுதியில் சாலையோரமாக நட்டு, தண்ணீர்  ஊற்றிவிட்டுச் சென்றனர். 


போராட்டக் குழுவினர், 'மரம்வெட்டி அரசே மரக்கன்று நடுகிறோம் பார்', 'சுரண்டாதே சுரண்டாதே இயற்கையை சுரண்டாதே', 'அழிக்காதே அழிக்காதே இயற்கையை அழிக்காதே', 'நிலம் எங்கள் உரிமை தமிழக அரசே நிலத்தை விட்டு வெளியேறு' என்று எழுதப்பட்ட பதாகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மறியலின்போது ஏடிஎஸ்பி சுரேஷ்குமார், போராட்டக்குழுவில் இருந்த இளைஞர் அருளைப் பார்த்து நீ யார்? நீ இந்த ஊரைச் சேர்ந்தவரா? எதற்காக இங்கே பேசுகிறாய்? என்று கேள்வி எழுப்பினார். அதுவரை சமாதானத்தை நோக்கிச் சென்ற பேச்சுவார்த்தை ஏடிஎஸ்பியின் இந்தக் கேள்வியால் மீண்டும் இருதரப்பினரிடையேயும் கடும் வாக்குவாதத்தை உருவாக்கியது.


மூன்று நாள் அவகாசம் கழிந்த பின்னர், போலீசார் அனுமதி கொடுத்தாலும் இல்லாவிட்டாலும், புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடப்படும் என்று எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.