ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் அரியலூர், விழுப்புரம் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 15 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் வாசுதேவ முருகன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். அதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் செந்தில் முருகன் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலையில் ஏராளமான ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், வாட்டர் டேங்க் இயக்குபவர்கள், ஊராட்சிச் செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அரியலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வாட்டர் டேங்க் ஆபரேட்டர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் காலம் முறை ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும். பத்தாண்டுகள் பணி செய்தவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பத்து ஆண்டுகள் பணி செய்த ஊராட்சி செயலாளர் நிலை பணி நிரந்தரம் செய்வதோடு அந்தந்த பகுதியில் பணியமர்த்த வேண்டும். கரோனா பருவகாலத்தில் தூய்மை பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், வாட்டர் டேங்க் ஆப்ரேட்டர்கள் இப்படி ஊராட்சிகளில் பணி செய்த அனைவரும் தியாக மனப்பான்மையோடு கடுமையாக துணிச்சலோடு பணி செய்தனர்.
அவர்களுக்கு ஊக்கத் தொகையாக 15 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு கூறியது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக வழங்க வேண்டும். கிராம மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் தூய்மைப் பணியையும் செய்து வரும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.