Skip to main content

என்ஃபீல்டு, யமஹா தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்! ராமதாஸ்

Published on 30/09/2018 | Edited on 30/09/2018
Enfield, Yamaha workers must resolve the fight

 


என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருவது  தமிழக அரசு. மக்களின் வரிப்பணத்தில் சலுகைகளை அனுபவிக்கும் இந்த ஆலைகள் தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடும் போது அதை கண்டித்து திருத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு தான் உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சென்னையை அடுத்த திருப்பெரும்புதூர் தொழில் மண்டலத்தில் அமைந்துள்ள என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட 5 மோட்டார் வாகனத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகள்  கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில்,   அதற்கு தீர்வு காண வேண்டிய அரசு, நிர்வாகங்களுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
 

திருப்பெரும்புதூரில் உள்ள என்ஃபீல்டு மோட்டார் வாகன ஆலையில் 480 நாட்களுக்கும் கூடுதலாக பணியாற்றிய 120 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்ய மறுத்த நிர்வாகம், அவர்களை பணி நீக்கம் செய்துள்ளது. தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதற்காக தொழிற்சங்கம் அமைத்ததற்காக நிரந்தரத் தொழிலாளர்கள் இருவர் பணி நீக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து திருப்பெரும்புதூர் ஆலையில் 3500 தொழிலாளர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் தொழிற்சாலையில் 2700 ஊழியர்கள் என மொத்தம் 6200 பேர் கடந்த 24-ஆம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

அதேபோல், ஓரகடத்தில் உள்ள யமஹா ஆலையிலும் இதே போன்ற அடக்குமுறைகளைக் கண்டித்து  600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை வளாகத்திற்கு அருகில், செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மயோங் சின் ஆட்டோமோடிவ் தொழிற்சாலையில் கடந்த 25 நாட்களாக தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். பூவிருந்தவல்லி பகுதியில் செயல்பட்டு வரும் ஹனிவெல், டோங்சான் ஆகிய இரு நிறுவனங்கள் நிரந்தரப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் நோக்குடன் தொழிற்சாலைகளை மூடிவிட்டன. இதனால் பல்லாயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

என்ஃபீல்டு உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் நடைபெறும் போராட்டங்களுக்கும், சில ஆலைகள் மூடப்பட்டதற்கும் அடிப்படைக் காரணம் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் தான். அனைத்து தனியார் பெரு நிறுவன நிர்வாகங்களுமே நிரந்தர பணியாளர்களை அமர்த்தவோ, குறிப்பிட்ட காலம் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்யவோ தயாராக இல்லை. ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தி, அவர்களின் உழைப்பைச் சுரண்டி சக்கையாக்கிய பின் எந்த பயனும் அளிக்காமல் தூக்கி எறிகின்றனர். பல நிறுவனங்களில் ஊதிய உயர்வு கூட வழங்குவதில்லை. இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மீது பணி நீக்கம், பழிவாங்கல் உள்ளிட்ட அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன.
 

ஹனிவெல், டோங்சான் போன்ற நிறுவனங்களின் பிரச்சினைகள் வேறு விதமானவை. அந்நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் நிரந்தர ஊழியகளுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களின்படி அதிக ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கத் தயாராக இல்லை. நிறுவனத்தை சில மாதங்கள் மூடி வைத்தால் நிரந்தரப் பணியாளர்களை நீக்கி விட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களை மட்டும் அடிமைகளைப் போன்று வைத்துக் கொண்டு குறைந்த ஊதியத்தில் அதிக உழைப்பை சுரண்டிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் அந்த நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடி வைத்திருக்கின்றன.
 

திருப்பெரும்புதூர் மண்டலத்தில் மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் போராடி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தீர்த்து வைப்பது இருக்கட்டும்.... கோரிக்கைகளைக் கேட்கக் கூட பினாமி அரசு தயாராக இல்லை. 1991-ஆம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர் தொழிலாளர் நலச் சட்டங்கள் அனைத்தும்  முதலாளிகளுக்கு சாதகமாக மாற்றப்ப்பட்டு விட்டதால், நீதிமன்றங்களும், தொழிலாளர் நல அமைப்புகளும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. என்ஃபீல்டு பிரச்சினை குறித்து விசாரித்த தொழிலாளர் நல இணை ஆணையர், தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல், அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். யமஹா வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றமோ, ஆலைக்கு 200 மீட்டருக்கு அப்பால் சென்று போராட்டம் நடத்த வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.
 

என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கி வருவது  தமிழக அரசு. மக்களின் வரிப்பணத்தில் சலுகைகளை அனுபவிக்கும் இந்த ஆலைகள் தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடும் போது அதை கண்டித்து திருத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு தான் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, பெரு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் அனைத்துப் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார். 

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.