
மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை ஊராட்சியில் அரசு அலுவலர்கள் கிராமசபைக்கூட்டத்திற்கு வராத நிலையில் கிராம மக்களே சாலையோரம் பாய்விரிப்பு விரித்து கிராமசபை கூட்டத்தை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி மாப்படுகை. சுமார் 3000 குடும்பத்திற்கு மேல் வசிக்கும் அந்த ஊராட்சியில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் போனதால் அங்குள்ள சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் ஒன்றுகூடி அரசு பள்ளி வாசலில் பாய் விரிப்பு விரித்து அதில் அமர்ந்து கிராமத்திற்கு தேவையான அடிப்படை விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர். அதனை தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த தகவல் மயிலாடுதுறை யூனியன் அதிகாரிகளுக்கு தெரியவர பதறியடித்துக் கொண்டு அங்கு சென்றுள்ளனர். அதற்குள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றுவிட்டனர்.