Skip to main content

செரியலூர் இனாம் கிராமத்தில் புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை பொக்லைன் உதவியுடன் மீண்டும் நடும் விவசாயிகள்...

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
coconut tree


 

கீரமங்கலம், டிச, 12.
செரியலூர் இனாம் கிராமத்தில் கஜா புயலுக்கு சாய்ந்த கிடந்த தென்னை மரங்களை பொக்லைன் உதவியுடன் மீண்டும் நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 



வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள் 

கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய மாவட்டங்களில் தென்னை, தேக்கு, பலா மரங்கள் ஒடிந்து சாய்ந்தது. ஒவ்வொரு தோட்டத்திலும் தென்னை மரங்கள் வேரோடும் சாய்ந்தது. கோடிக்கணக்காண தென்னை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மறுநடவு செய்யலாம் என்றும் மறுநடவு செய்தால் ஒரு வருடத்தில் மீண்டும் காய்ப்பு தொடங்கும் என்றும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவியது. சுமார் 20 நாட்கள் வரை வேதனையில் இருந்து விடுபடாத விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டி அகற்றுவது பற்றிய சிந்தனையில் உள்ளனர். இந்த நிலையில் தான் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மறுபடியும் நடும் முயற்சியிலும் ஒரு சில விவசாயிகள் இறங்கியுள்ளனர்.



தென்னை மரங்கள் மறுநடவு:


இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மறுநடவு செய்ய விவசாயி துரை முயற்சி செய்து அதற்காக ஆழ குழி தோண்டவும், மரங்களை தூக்கி குழியில் நடவு செய்யவும் பொக்லைன் வாடகைக்கு எடுத்ததுடன் அதற்காக இளைஞர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு தனது தோட்டத்தில் சாய்ந்து வேரோடு கிடந்த தென்னை மரங்களை ஆழக்குழியில் மருந்துகள் தெளித்து மறு நடவு செய்தார். 


 

coconut tree



தென்னை மரங்களை மறுநடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள செரியலூர் ஆறுமுகம் மற்றும் இளைஞர்கள் கூறும் போது... வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் நடலாம் என்பதை அறிந்த பிறகு பொக்லைன் உதவியுடன் 6 முதல் 10 அடி வரை குழி வெட்டி சாய்ந்து கிடக்கும் தென்னை மரத்தில் காயம் ஏற்படாமல் கயிறுகட்டி நிமிர்த்தி குழிக்குள் நுண்ணூட்ட மருந்துகளை தெளித்து மரத்தை நட்டு வருகிறோம். இதுவரை ஆயிரம் மரங்களுக்கு மேல் மறுநடவு செய்திருக்கிறோம். இதனால் விவசாயிகள் மீண்டும் தென்னங்கன்று நட்டுவிட்டு 5 வருடம் காத்திருக்காமல் அடுத்த ஆண்டே தேங்காயை பார்க்க முடியும் என்று நம்புகிறோம். இதற்காக பொக்கலின் வாடகையும் துணைக்கு நிற்கும் இளைஞர்களுக்கு ஒரு நாள் சம்பளமும் மட்டுமே விவசாயிகளிடம் வாங்குகிறோம். இதை பேரிழப்பில் இருக்கும் விவசாயிகளுக்கு செய்யும் சமூகப்பணியாகவே நினைக்கிறோம் என்றனர்.


இதே போல வேரோடு சாய்ந்த தேக்கு, குமிழ், போன்ற மரங்களும் மறுநடவு பணிகளை செரியலூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

Next Story

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Tuticorin fishermen banned from going to sea
கோப்புப்படம்

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதே சமயம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த முன்னறிவிப்பில், ‘தென் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் ஜனவரி 11 ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் விடுத்திருந்த எச்சரிக்கையின் படி, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் 300 விசைப் படகுகளும், 2 ஆயிரம் நாட்டுப் படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.