சென்னை சவுகார்பேட்டையில் குடும்பமே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சவுகார்பேட்டையில் 5 கோடி ஜீவனாம்சம் கேட்டு, கணவர் குடும்பத்தினரை ஜெயமாலா என்பவர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் ஷீத்தலை குடும்பத்துடன் கொலை செய்யத் திட்டமிட்டு பூனாவில் இருந்து துப்பாக்கியுடன் வந்த ஜெயமாலா, ஷீத்தல் வீட்டிற்குச் சகோதரர்களுடன் இணைந்து கணவர், மாமனார், மாமியாரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. மூன்று பேரையும் சுடும்போது சத்தம் கேட்காமல் இருக்க துப்பாக்கியில் சைலன்ஸ்சர் பயன்படுத்தியதாகவும் தகவல் வெளியுள்ளது.
இந்நிலையில், தற்பொழுது சுட்டுக் கொல்லப்பட்ட 3 பேரின் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது பிரேதப் பரிசோதனை தொடங்கியுள்ள நிலையில், நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் இந்தப் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். எந்த ரக துப்பாக்கியால் சுடப்பட்டனர்.. அந்த குண்டு என்ன ரகம் என்பது தொடர்பான விவரங்கள், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில், நேற்று தடயவியல் சோதனையும் நடைபெற்றது. அதில் அந்த துப்பாக்கிக் குண்டுகளுடைய பகுதிகள் எடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெயமாலாவை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.