Skip to main content

உயிருக்கு பயந்து  ஓடி மறைந்ததால் வீட்டிற்கு தீ வைப்பு -  சூடு தாங்காமல் வெளியே வந்ததும் வெட்டிக்கொலை

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
hej

 

காட்டுமன்னார்கோயில் அருகே டேங்க் ஆப்ரேட்டரை வீட்டில் அடைத்து கொளுத்திவிட்டு, அவர்   தப்பியபோது வெட்டிகொலை செய்த 12 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.
 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வடமூர் சேர்ந்தவர் சாமிநாதன் என்பவரது மகன் சம்பத்குமார் (42). இவர், அதே ஊரில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் வடமூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்த ஹேமலதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.

 
பின்னர் அவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாபு என்பவருக்கு நெருக்கமாக இருந்து, செயல்பட்டுள்ளார். இதனால் பாபு தரப்புக்கும் ஹேமலதா தரப்புக்கும் அடிக்கடி பிரச்சணை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2013 பிப் 26-ந்தேதி சம்பத்குமாரை அப்போது ஊராட்சி மன்ற தலைவியாக இருந்த ஹேமலதா (45), அவருடைய கணவர் ராமசாமி (54), அருள்குமார் (38), சந்தோஷ்குமார் (32), ரத்தினசபாபதி மகன் சசிகுமார்(40), ரங்கநாதன் மகன் பாஸ்கர் (40), விவேகானந்தன்(55), சகஜானந்தம் (47), கலியமூர்த்தி மகன் பழனிசாமி (42), ராமதாஸ் மகன் மதன்மோகன் (31), ராஜ் மகன் அழகானந்தம் (45) மெய்யழகன் மகன் ராஜ்குமார் (32), மோகன் (59) பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் (40) ஆகிய 14 பேரும் அவரை வழிமறித்து தாக்கினர்.
 

இதில் உயிருக்கு பயந்து போன அவர் தனது வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதையடுத்து ஹேமலதா உள்பட 14 பேரும் சேர்ந்து சம்பத்குமார் வீட்டை தீ வைத்து கொளுத்தினர். இதில் வீட்டுக்குள் இருந்த சம்பத்குமார் தீக்காயங்களுடன் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது வெளியில் நின்ற 14 பேரும் அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.

 
இதுகுறித்து சம்பத்குமார் தரப்பை சேர்ந்த சுந்தரவல்லி சிதம்பரம் தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 14 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் நடந்து வந்தது. இதற்கிடையில் ராமசாமி, பாஸ்கர் ஆகிய 2 பேரும் வழக்கு விசாரணை காலங்களில் உயிரிழந்தனர்.

 
இந்த வழக்குகளின் விசாரணை முடிந்து நீதிபதி சண்முகசுந்தரம் தீர்ப்பு கூறுகையில் இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ஹேமலதா உள்பட 12 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்ளித்தார். தீர்ப்பு பற்றி அறிந்ததும் 12 பேரின் குடும்பத்தினரும் சிதம்பரம் கோர்ட்டு வளாகத்தில் குவிந்தனர். அவர்கள் நீதிபதியின் தீர்ப்பை கேட்டதும் கதறி அழுதனர். பள்ளி சீருடைகளில் வந்த அவர்களின் குழந்தைகளும் அவர்களை பார்த்து அழுதனர். இதையடுத்து அவர்கள் 12 பேரையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதனால் நீதி மன்ற வளாகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்