சென்னை மாடம்பாக்கத்தில் வீட்டில் கஞ்சா செடி வைத்திருந்ததோடு போதை ஸ்டாம்ப் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது வீட்டில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டதும், போதை ஸ்டாம்ப் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சக்திவேல், சாம் சுந்தர், ஸ்ரீகாந்த், நரேந்திரகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்த வடக்கு கடற்கரை போலீசார், அவர்களிடம் இருந்து 300 போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போலீஸ் தரப்பு, ''300 போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்து இருக்கிறோம். ஒரு ஸ்டாம்ப் 2000 ரூபாய் என்றால், மொத்தமாக 6 லட்சம் ரூபாய் கொண்ட போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து எப்படி ஆர்டர் வருகிறது? கொரியர் மூலமாக வருகிறதா? எந்த வழியாக வந்து சேருகிறது? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
கஞ்சா இந்தியாவிற்குள் இருந்தும் கடத்தப்படுகிறது, கொஞ்சம் வெளிநாட்டில் இருந்தும் வருகிற மாதிரி இருக்கிறது. கஞ்சா, போதை ஸ்டாம்ப்களை இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள். உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்கவும், சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்கவும் இவை தூண்டி விடுகிறது. குறிப்பாக வழிப்பறி சம்பவங்கள் உள்ளிட்ட பெரிய பெரிய குற்றங்கள் போதையில் இருப்பவர்களால் நிகழ்த்தப்படுகிறது'' என்றார்.