Skip to main content

மஞ்சள் பையும் மரக்கன்றுகளும்.. அரசுப் பள்ளி ஆசிரியரின் சைக்கிள் பயணம்!

Published on 14/12/2018 | Edited on 15/12/2018

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி  இடைநிலை ஆசிரியர் சரவணன். மாணவர்களிடம் இயற்கை வழி வாழ்வு, பிளாஸ்டிக் பைக்கு பதிலாக மஞ்சள் பை உபயோகிக்க வலியுறுத்தியும், மரங்களை நட்டு பராமரிப்பது குறித்தும் அரசு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். சைக்கிள் பயணத்தின் போது பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள், மஞ்சள் பை கொடுத்து உறுதிமொழி எடுக்கவைத்தும் வருகிறார். 

 

 Bicycle tour of the government school teacher

 

 

இதுபற்றி ஆசிரியர் சீ.சரவணன் கூறும் போது.. 

 

கடந்த ஜூன் 30 ஆம் தேதி  புதுக்கோட்டை மாப்பிள்ளையார் குளம் அருகே கனமழை பெய்தது. அப்பொழுது வரத்துவாரி பாலத்தின் அடியில் உள்ள தண்ணீர் வெளியேறும் குழாயில் கேரிப் பைகள் அடைத்திருந்ததால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தண்ணீர் பாலத்தின் மேல் உள்ள  சாலையில் அதிகளவில் சென்றது.. அப்பொழுது அவ்வழியே வந்த பள்ளிக் குழந்தைகள் அந்த இடத்தை கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அந்த குழந்தைகள் கடக்க நான் உதவி செய்தேன். அதன் பிறகு தான் மக்களிடம் கேரிப்பையை பயன்படுத்த கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.. வருடந்தோறும் காந்தி ஜெயந்தி அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறும் மறைந்த நம்மாழ்வாரின் உரைகளை கேட்ட பொழுது அவரின் மீது பற்று ஏற்பட்டது. 

 

 Bicycle tour of the government school teacher

 

அன்றிலிருந்து இயற்கை வாழ்வு குறித்த தேடலில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். திருத்துறைப்பூண்டியில் நெல்ஜெயராமன் நடத்தும் நெல் திருவிழாவில் கலந்து கொள்வேன்.. அங்கே அவர் கொடுக்கும் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு வந்து விவசாயியும் ஆசிரியருமாகிய காட்டுப்பட்டி சின்னக்கண்ணுவிடம் கொடுப்பதை கடமையாக செய்துவந்தேன். வீட்டு மாடியிலும் மாடித் தோட்டம் அமைத்து பராமரித்துவருகிறேன். 

 

நான் எப்பொழுதும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதையே தனது வாடிக்கையாக செய்துவருகிறேன். என்னுடைய திருமண நாள் 2014 செப் 4 அன்று வந்திருந்த அனைவருக்கும் ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கினேன். 

 

பள்ளியின் முக்கிய விழாக்களின் போதும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறேன். தற்பொழுது எனக்கு பி.எட் பயின்றமைக்காக ஊக்கத் தொகை கிடைத்தது. அந்த பணத்தில் ஒரு பகுதியை நல்வழியில் செலவிட எண்ணி என் மனதில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்ய எண்ணம் வந்தது. அதன்படி பாரதி பிறந்த டிசம்பர் 11 ஆம் தேதி மாங்குடியில் எனது பயணத்தை தொடங்கி மாராயபட்டி, புல்வயல், பெருமாநாடு, பெருஞ்சுனை , சுந்தர்ராஜ்நகர், கோதாண்டராம்புரம், கீழபழுவஞ்சி, மற்றும் பல பள்ளிகளில் இயற்கை வாழ்வு வாழ மேற்கொள்ள வேண்டிய முறை குறித்தும், மரம் நட்டுப்பராமரிப்பதின் அவசியம் குறித்தும், கேரிப்பையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறேன். 

 

 Bicycle tour of the government school teacher

 

எனது பயணம் இந்த வாரம் நிறைவு பெற்று விடும். அடுத்து ஜனவரிக்குப் பிறகு விடுமுறை நாட்களில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மக்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மாணவர்கள் நாங்களும் உங்களை போல் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என என்னிடம் கூறும்பொழுது என் மனம் மகிழ்வாக இருக்கிறது. நாம் எப்படி நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல மண்ணில் வாழ்ந்தோமோ அதுபோல நம் சந்ததியும் வாழ வேண்டும் என்பதற்காகவே பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறேன். தற்பொழுது உருவம்பட்டி பள்ளியில் மாணவர்கள் என்னை அன்போடு வரவேற்று அவர்களது உற்சாக செயல்பாடும் என்னை மேலும் இந்த பணிகளை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற உந்துதலைத் தந்துள்ளது என்றவர் கஜா புயலுக்கு கோடிக்கணக்கான மரங்கள் சாய்ந்துவிட்டது. அந்த மரங்களை நிமிர்த்த முடிந்த மரங்களை நிமிர்த்துவதுடன் இப்போதே மரக்கன்றுகளை நட்டால் சில ஆண்டுகளில் அழிந்த மரங்களை மீட்க முடியும். ஆல், அரசு போன்ற நிழல் தரும் மரங்கள் சாய்ந்திருந்தால் அந்த மரங்களை காக்க போத்துகளை நட்டால் வேகமாக வளரும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.