தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களில் முதலிடம் வகிப்பது திருவண்ணாமலை மாவட்டம். பரப்பளவில் மிகபெரிய மாவட்டமான இது, விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளது. இதனால் இப்பகுதி ஏழை மக்கள் அதிகளவில் வேலைக்காக சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பயணமாகி வேலை செய்துவருகின்றனர்.
கரோனா ஊரடங்கால் வேலை இழந்த தொழிலாளர்கள் உயிருக்கு பயந்து தங்களது ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். அப்படி வருபவர்களை கண்காணித்து கரோனா பரிசோதனைக்குபின் அனுமதித்தனர். அப்படி வந்தவர்களில் கரோனா இருப்பவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அனுமதி பெறாமல் அதாவது இ-பாஸ் பெறாமல் மாவட்டத்துக்குள் வந்தவர்களால் கரோனா பரவியது.
இதனை தாமதமாக உணர்ந்த மாவட்ட நிர்வாகம், இரண்டு தினங்களுக்கு முன்பு இ-பாஸ் இல்லாமல் மாவட்டத்துக்குள் வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. திருவண்ணாமலை எஸ்.பி சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக யாரும் திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழையாதபடி 21 சோதனை சாவடிகள் ஏற்கனவே உள்ளன. அந்த சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி இ-பாஸ் இல்லாமல் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர்.
இதுபற்றி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி கூறும்போது, ஜூன் 17ந்தேதிவரை 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு பதிவு செய்ததோடு இ-பாஸ் இல்லாமல் வந்த 420 பேரை தனிமைப்படுத்தி வைத்துள்ளோம் என்றார். மாவட்ட எல்லைகளில் கடுமையாக சோதனை நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வருபவர்களை வேலூர், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி உள்ளே அனுமதிக்காமல் நிறுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.