Skip to main content

“மந்திரத்தை எங்களுக்கும் சொல்லுங்கள்” - பிரதமருக்கு கடிதம் போட்ட காங்கிரஸ்

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

"Tell us the mantra too"- Congress wrote a letter to the Prime Minister

 

பிரதமர் மோடிக்கு ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் மூலம் கேள்வி எழுப்புகிற இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.லெனின் பிரசாத் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி இன்று (4.4.2023) செவ்வாய்க்கிழமை சென்னை சத்தியமூர்த்திபவனில் தொடங்கி வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

 

இந்நிகழ்விற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் என்ன கேள்வி கேட்க வேண்டும் எனச் சொல்லியுள்ளாரோ, இதுவரை பொதுவெளியில் என்ன கேள்விகளைக் கேட்டுள்ளாரோ அந்த கேள்விகளை தமிழக இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் கேட்டுள்ளனர்.

 

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் இந்த கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். முதல் கேள்வி, அதானி இதுவரை பாஜகவிற்கு எவ்வளவு கோடி நிதி கொடுத்துள்ளார். இரண்டாவது கேள்வி, உங்கள் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து அதானி எத்தனை ஒப்பந்தங்களை வென்றெடுத்துள்ளார். மூன்றாவது கேள்வி, உங்களது சிறந்த நண்பர் 609 ஆவது இடத்தில் இருந்து 8 ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பணக்காரராக வருவதற்கான மந்திரத்தை எங்களுக்கும் கூறுங்கள்.

 

பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் சார்பாக வாக்காளராக விளங்கும் ஒருவரிடம் இருந்து இந்த கேள்விகள் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு மோடி பதில் சொல்ல வேண்டும் என்பது தான் இந்தியாவில் உள்ள அத்தனை கோடி மக்களும் எதிர்பார்க்கிறார்கள்” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்