Skip to main content

தமிழகத்தில் கூட்டணி குறித்து கவலைப்படவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்

Published on 14/07/2018 | Edited on 14/07/2018
tamil isai soundararajan


கொடைக்கானலில் நடைபெற்று வரும் மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெள்ளிக்கிழமை வருகை தந்தார்.
 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 
 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தொண்டர்களை தயார்படுத்தி வருகிறோம். கட்சியின் தலைவர் அமித்ஷாவின் உத்தரவின்படி 20 சட்டமன்ற பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர். தமிழகத்தில் கூட்டணி குறித்து கவலைப்படவில்லை. இருப்பினும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கூட்டணி குறித்து பேசப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் நன்றாக உள்ளனர். 
 

 

 

தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இணைந்து செயல்பட்ட தி.மு.க. எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான திட்டத்தினை குறை கூறுவதிலேயே குறியாக உள்ளனர். மோடி பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
 

புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள். தலைப்பு செய்தியாக வருபவர்கள் தலைவராக வர முடியாது. உலக அளவில் பொருளாதாரத்தில் பல நாடுகளை பின்னுக்குத்தள்ளி இந்தியா 6-வது இடத்தினை பிடித்து சாதனை புரிந்துள்ளது. மோடியை குறை சொல்பவர்கள் உலக அளவில் பெயர் கிடைத்தாலும் பாராட்டுவது இல்லை. 
 

 

 

தமிழகத்தில் பல திட்டங்கள் பாராட்டப்பட்டாலும் சில திட்டங்களை எச்சரிக்கையாக கையாளவேண்டும். பேரிடர் மேலாண்மை பயிற்சி மேற்கொண்ட லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தது ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை. இதற்கு கல்லூரி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும். முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் நடத்தப்பட்ட இந்த பயிற்சி குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரை வருகிறார் மோடி - தமிழிசை சௌந்திரராஜன் பேட்டி

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
narendra_modi



பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர், 
 

பிரதமர் நரேந்திரமோடி ஜனவரி 27ஆம் தேதி மதுரை வருகிறார் என்று தகவல் வந்திருக்கிறது. அதிகாரப்பூர்வமாக இன்று காலைதான் இந்த தகவல் எங்களுக்கு வந்திருக்கிறது. பல லட்சம் தொண்டர்கள் இணைந்து மிகபெரிய மாநாடு நடத்த இருக்கிறோம். 

 

ஏற்கனவே பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை நாங்கள் துவங்கிவிட்டோம். பிரதமர் மோடி வருவது மிகப்பெரிய மாநாடாக அமையும், மிகப்பெரிய பிரச்சாரமாக அமையும். மோடியின் வருகை எங்கள் தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் உற்சாகத்தை தரும். மற்ற பயணத்திட்டங்கள் பற்றி திட்டமிட்டப் பிறகு சொல்கிறேன். 

 

கூட்டணி குறித்து இன்னும் முழுமையாக முடிவு செய்யப்படவில்லை. கூட்டணி வைத்துத்தான் போட்டியிடுவோம். கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறது. காலஅவகாசம் இருப்பதால் தெளிவாக முடிவு எடுப்போம். பாஜகவின் முழுக் கவனமும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதில் உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாக 6ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்றார். 
 

 

 

 

Next Story

பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கப்போகும் போராட்டம்-சோபியா கைது குறித்து காங்கிரஸ் தலைவர்

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
sofia


பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செப்டம்பர் 3ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா (வயது 28) என்ற பெண் பயணி திடீரென பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை மதியம் 12.01 மணிக்கு வந்தடைந்தது. அங்கு வரவேற்பு அறையில் தமிழிசை சவுந்தரராஜன், அந்த இளம்பெண்ணிடம் கோஷம் எழுப்பியது தொடர்பாக தட்டிக்கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

 
இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சோபியாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை, சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். 

 
பின்னர் அவரை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை கொக்கிரகுளம் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக சோபியா தெரிவித்ததால் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று சோபியாவுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுவிட்டது. சோபியாவின் கைதுக்கு பல தரப்பிலான அரசியல்வாதிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். 
 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, ”நாட்டில் ஒரேயொரு குரல்தான் ஒலிக்க வேண்டும், அது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ன் குரலாகத்தான் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அவர்களைத் தவிர்த்து யாராவது பேசினால் அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள். இதற்காகத்தான் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்தார்களா? இதைத்தான் இந்தியா விரும்புகிறதா? 2019க்கான போராட்டம் என்பது பாஜகவின் பாசிசம் மற்றும் முற்போக்காளர்கள் முன்னெடுக்கும் ஜனநாயகத்துக்கும் இடையில் இருக்கும்” என்று கூறினார்.