Skip to main content

"யாரிடம் பேசவேண்டும் சொல்லுங்கள்?" - பிரதமரிடம் கேள்வியெழுப்பிய அரவிந்த் கெஜ்ரிவால்!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

arvind kejriwal

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று (22.04.2021) ஒரேநாளில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கரோனா உறுதியானது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 263 பேர் உயிரிழந்தனர். மேலும், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளன. டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி தெரிவிப்பதும், ஆக்ஸிஜன் முழுவதுமாக தீர்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், புதிய நோயாளிகளை அனுமதிக்க மறுத்து வருகின்றன.

 

மேலும், டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜனை சில மாநிலங்கள் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில், கரோனா அதிகம் பாதித்துள்ள மாநிலத்தின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி, தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் பெரும் அளவில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளது. இங்கு ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகள் இல்லையென்பதால், டெல்லி மக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காதா? டெல்லிக்கு வர வேண்டிய ஆக்ஸிஜன் டேங்கர், வேறொரு மாநிலத்தில் தடுக்கப்பட்டால் மத்திய அரசில் யாரிடம் பேச வேண்டும் என்பதை தயவுசெய்து கூறுங்கள்” என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

ad

 

மேலும் அரவிந்த் கெஜ்ரிவால், “நாட்டில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகளையும் இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். டெல்லிக்கு ஆக்ஸிஜன் ஏற்றிவந்த வாகனங்களை பல மாநிலங்கள் தடுத்து நிறுத்தியதால் தீர்வு தேவை. இராணுவத்தின் பாதுகாப்புடன் டெல்லியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் வழங்க வேண்டும்” எனவும் அவர் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub