
பீகார் மாநிலம், கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், விகாஷ் குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பள்ளியில் படிக்கும் 12ஆம் படிக்கும் மாணவி ஒருவரிடம், தன்னை காதலிக்குமாறு விகாஷ் குமார் பலமுறை துன்புறுத்தியுள்ளார். மகாபாரதத்தின் வில்வீரன் ஏகலைவன், தனது குரு துரோணாச்சாரியாரை மகிழ்விக்க வலது கையின் கட்டைவிரலை வெட்டிய சம்பவத்தை உதாரணமாக காட்டி, தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தின் கோபமடைந்த அந்த மாணவி, தனது பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்து புகார் அளித்தார். புகார் அளிக்கப்பட்ட பிறகு, இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் ஷபிக் அகமது மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால், கல்வி அலுவலகம் விகாஷ் குமாரிடம் விளக்கம் கேட்டதைத் தவிர அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
விகாஷ் குமார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கிராம மக்கள் ஆத்திரமடைந்த பள்ளிக்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால், அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், விகாஷ் குமார் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.