Skip to main content

தூத்துக்குடியில் தமிழிசை எடுத்துள்ள புதிய ஆயுதம்!

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியானது தமிழகமே உற்று நோக்கும் ஒரு  சிறப்புமிக்க தொகுதியாக அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. 

 

tamilisai's new strategy for loksabha election

 

இங்கு பிஜேபி, திமுக, அமமுக மற்றும் சுயேட்சைகள் உட்பட 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கட்சிகளுக்கிடையே பலமுனை போட்டியாக இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி தொகுதி இருமுனை போட்டியாக உள்ளது.
 

திமுக வேட்பாளர் கனிமொழி தனது முதற்கட்ட பிரச்சாரங்களை கிராமப்புறங்களில், பல்வேறு செயல்திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அமமுக வேட்பாளர் புவனேஸ்வரனின் பிரச்சாரமானது தினகரனின் மீதான செல்வாக்கு, அமமுகவின் கட்சி பிரமுகர்களின் மூலமாகவே தனக்கான வாக்கு என தனியொரு பாணியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
 

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பெரிய அளவில் இன்னும் தேர்தல் களத்தை அணுகவில்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க பிஜேபி கட்சி வேட்பாளர் தமிழிசை முதற்கட்டமாக அதிமுக கட்சி மாவட்ட பொறுப்பாளர்களை ஒருங்கிணைப்பு, சமாதானம்  செய்யும் பணிகளையே செய்து வருகிறார்.
 

காரணம் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ் விசுவாசி சண்முகநாதன் மாவட்ட செயலாளராக உள்ள நிலையில் செல்லப்பாண்டியன், கடம்பூர் ராஜூ போன்ற கட்சி பிரமுகர்கள் தனக்கானவாக்குகளை பெற முயற்சிப்பார்களா என்கிற சந்தேகம் தமிழிசை மத்தியில் எழ தொடங்கி உள்ளது.
 

தூத்துக்குடியில் பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என கூட்டணியில் உள்ள கட்சிகளில் செல்வாக்கு குறைந்து உள்ள சூழலில், கடந்த 2014ல் தூத்துக்குடியில் அதிமுக  பெற்ற 3,66,056 வாக்குகளை மீண்டும் பெற்று விட வேண்டும் என்ற கன(நினை)வில் இருந்தாலும் மிகப்பெரிய சந்தேகக் கண்ணோட்டம் இருந்து கொண்டே இருக்கிறது, தமிழிசை மற்றும் பிஜேபியினர் மத்தியில்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாடார் சமூகத்தினர் வாக்கு வங்கியானது 32% உள்ளது. மேலும் இந்துகளின் வாக்கு சதவிகிதமானது 78.50% ஆகும். தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி பிரிக்கப்படுவதற்கு முன்பு திருச்செந்தூர் தொகுதியாக இருந்தபோது அதில் வென்ற நாடார் சமூகத்தைச் சேர்ந்த  ராதிகாசெல்விக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது திமுக ஆட்சிக்காலத்தில்தான். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உள்ளது திமுக கட்சி. இதுவும் கனிமொழிக்கு கூடுதல் நம்பிக்கையை பெற்றுத் தந்துள்ளது. இதனால் பிஜேபி வேட்பாளர் தமிழிசையின் தூத்துக்குடியில் பெரும் சவால் உள்ளது என்பதே பல அரசியல் விமர்சர்களின் கருத்தாக உள்ளது. இதனால் தூத்துக்குடி தொகுதியில் பெரும்பான்மையான வாக்குடைய மக்களுடன் தன்னை நெருக்கமாகக் காட்டும் விதமாக "நான் பனங்காட்டுக்காரி", "நான் கற்றப்பரம்பரை குற்றப்பரம்பரை இல்லை" என்று பேசும் யுக்தியை செயல்படுத்துகிறார். இந்த யுக்தி வெற்றி பெறுமா என்பது விரைவில் நமக்குத் தெரிய வரும்.