Skip to main content

"இந்த கஷ்டகாலத்தில் விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும்" - விஜய் ஆண்டனி வேண்டுகோள்!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021
vgdsgdasg

 

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர்  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி பேசியபோது.... 

 

“தனஞ்செயன் சாரை எறும்பு போல சுறுசுறுப்பானவர் என்று சொன்னார்கள். பத்து எறும்பின் சுறுசுறுப்பு அவரிடம் உள்ளது. எல்லா பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். தமிழ் சினிமாவுக்கு மிகவும் அவசியமான தயாரிப்பாளர். படத்தின் நாயகன் சிபியும் ரொம்ப இனிமையான மனிதர். மிகப்பெரிய் நட்சத்திரத்தின் மகன் என்ற அடையாளமே இல்லாமல் இருப்பார். நான் இசையமைப்பாளராக இருக்கும் போதே அவர் என்னிடம் ரொம்ப இயல்பாக பழகுவார். இவர்களுடைய பட விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையமைப்பாளர் சைமன் ரொம்ப நெருக்கமானவர், திறமையானவர். அவருக்கான உயரம் இன்னும் இருக்கிறது. தெலுங்கிலும் அவர் அறிமுகமாக இருக்கிறார், அதற்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தின் கலை இயக்குநர் நிதேஷ், இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள். எடிட்டர் பிரவீன் சாரின் பணி சிறப்பாக இருக்கும். அவருடைய கட்டிங்ஸை பார்த்து நான் ரசிப்பேன். அவர் இந்த படத்தில் பணியாற்றியிருப்பது மகிழ்ச்சி.

 

படத்தின் இரண்டாவது ஹீரோ ஜே.எஸ்.கே சார். அவரை ரொம்ப ரசிப்பேன். அக்னி சிறகுகள் படம் மூலம் அவருடன் நெருங்கி பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப சிறந்த மனிதர். ரொம்ப இயல்பாக நடிக்க கூடியவர் ஜெயப்பிரகாஷ் சார். அவரை நான் எப்போதும் ஆச்சரியமாகவே பார்ப்பேன். ஒரு தயாரிப்பாளர் எப்படி இப்படி நடிக்கிறார் என்று வியந்து பார்த்ததுண்டு. படக்குழு அனைவருக்கும் என் வாழ்த்துகள். இந்த படம் மிக சிறப்பாக வந்துள்ளது. மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த படமும் வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். மற்ற நேரங்களில் பரவாயில்லை. ஆனால், இப்படி ஒரு கஷ்டமான காலக்கட்டத்தில் பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும். பெரிய படங்கள் போல சிறிய படங்களும் வெற்றி பெற வேண்டும். இந்த படம் ஏற்கனவே வெற்றி பெற்ற படம் தான். நிச்சயம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓட்டு தான் நம் வலிமையான ஆயுதம்” - விஜய் ஆண்டனி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
vijay antony about election 2024

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ள நிலையில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படம் ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளது. 

இதனால் படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை, சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களிலும் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சி குறித்த ஆலோசனையும், ரோமியோ படம் தொடர்பாகவும் கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, தேர்தல் குறித்தான செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், “எல்லாரும் ஓட்டு போடுங்க. ஓட்டு போடாம இருக்காதீங்க. நோட்டாவிற்கு போடாதீங்க. பெஸ்ட்-னு யாராவது இருப்பது போல வேஸ்ட்-னும் யாராவது இருப்பாங்க. அதில் யாராவையாவது தேர்ந்தெடுங்க. ஓட்டை வீணடித்து விடாதீங்க. ஓட்டு தான் நம் கைகளில் இருக்கக்கூடிய வலிமையான ஆயுதம். அதை மிஸ் பண்ணிட்டு குறை சொல்லக் கூடாது.

ஓட்டு போடுவதற்கு முன்னாடி யாருக்கு வாக்களிக்க வேண்டும், அவர் என்ன பண்ணார் என யோசித்து ஓட்டு போடுங்கள். அரை மணி நேரமாவது யோசியுங்கள். பாதி பேர் நேரா போய் குத்திட்டு வந்துடுறாங்க. பிடித்தவங்களுக்கு ஓட்டு போடுறாங்க. அப்பாவாக இருக்கட்டும் அம்மாவாக இருக்கட்டும், நாட்டுக்கு என்ன பண்ணாங்க, நல்லது பண்ண அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு என யோசிங்க” என்றார். 

Next Story

மனைவி மீது ஒரு தலைக் காதல் - விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Vijay Antony Mirnalini Ravi Romeo trailer released

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ரோமியோ. விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியானது. அதில் முதல் இரவு காட்சியில் விஜய் ஆண்டனி கையில் சொம்பும் மிருணாளினி ரவி கையில் மதுவும் வைத்திருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது, விஜய் ஆண்டனியிடம், படத்தின் போஸ்டரில் கதாநாயகியின் கையில் மது இருப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ரொம்ப நாளாகவே குடி என்பது நம்ம ஊரில் இருக்கிறது. முன்பு சாராயம், திராட்சை ரசம் என்ற பெயரில் குடிச்சிட்டு இருந்தோம். இப்போ பார்களில் குடிக்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே ஜீசஸ் கூட குடிச்சிருக்கார்” என கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் இல்லையெனில், அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமெனவும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். 

பின்பு இது தொடர்பாக விளக்கமளித்த விஜய் ஆண்டனி, “நான் பேசியதை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி  இருவருக்கும் கல்யாணம் நடந்த பிறகு மிருணாளினி ரவியை ஒரு தலையாக காதலிக்க முடிவெடுக்கிறார் விஜய் ஆண்டனி. அதற்காக என்ன திட்டம் தீட்டுகிறார், அவரது முடிவு நிறைவேறியதா? என்பதை விரிவாக காமெடி கலந்த ஒரு காதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.