
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு முன் ‘ஏஞ்சல்’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வந்தார். ஆனால் இப்படம் முழுமையாக முடியவில்லை. இந்த சூழலில் இப்படத்தின் தயாரிப்பாளர் ராம சரவணன் உதயநிதிக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், “துணை முதல்வரான உதயநிதி நடிகராக இருந்தபோது எங்களது தயாரிப்பில் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்து கடந்த 2018ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. 20 சதவீத படப்பிடிப்பு பாக்கியுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்து கொடுக்காமல் மாமன்னன் படத்தில் நடித்த உதயநிதி, அந்த படமே தனக்கு கடைசி படம் என அறிவித்துள்ளார். எனவே ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து கொடுக்கவும், அத்துடன் ரூ.25 கோடியை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி தரப்பு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது கால அளவு கடந்து தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்திருப்பதாகக் கூறி நீதி மன்றம் தயாரிப்பாளர் ராம சரவணன் தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து ராம் சரவணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக தற்போது துணை முதல்வர் உதயநிதி பதிலளிக்க நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை மார்ச் 18ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.