
டிஜிட்டல் சேவை அமைப்புகள் குறிப்பிட்ட தொகையை குறைக்க வலியுறுத்தி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் திரைக்கு வர தயாராக இருந்த பல படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை அமைப்பினருக்கும் இடையே நடந்த சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன. எனவே வேலை நிறுத்தம் தொடரும் என்று பட அதிபர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் திரையுலக பணிகள் முடங்கி உள்ளன. தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனால் திரையரங்குகளில் கூட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில் இதை ஓரளவு சரி கட்ட முயற்சி செய்து சில தியேட்டர்களில் பழைய படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன. ஆனால் ஒரு காட்சியில் 10 பேர், 15 பேர் மட்டுமே படம் பார்க்க வருவதாகவும் இதனால் பல திரையரங்குகளில் காலை, பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் சில தியேட்டர்களில் கூட்டம் இல்லாததால் 3 காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் தியேட்டர் அதிபர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் குறைந்தபட்சம் ரூ.1 கோடி வீதம் இதுவரை ஸ்ட்ரைக் நடந்த 5 நாட்களிலும் ரூ.5 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், இதே போல் இன்னும் 2, 3 நாட்கள் பட அதிபர்கள் வேலை நிறுத்தம் நீடித்தால் சில தியேட்டர்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பட அதிபர்கள் சங்கம் பிரச்சினையை சுமுகமாக தீர்த்து விரைவில் புதிய படங்களை திரைக்கு கொண்டுவரம் நடவடிக்கை எடுக்க தியேட்டர் அதிபர்களின் அவசர கூட்டம் நாளை (8ஆம் தேதி) மாலை 3 மணிக்கு சென்னையில் நடக்கிறது.