
இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற 8ஆம் தேதி (08.03.2025) நடைபெறவுள்ளது. இதனையொட்டி இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலாவதாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்பு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி., தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இளையராஜவை அவரது வீட்டில் நேரில் சந்தித்தி வாழ்த்து கூறியுள்ளார். மேலும் பழங்கால இசைக்கருவியான யாழ் இசைக் கருவியை அன்பளிப்பாக வழங்கி மகிழ்ந்தார். மேலும் அவரிடம் ஆசிர்வாதமும் பெற்றுக் கொண்டார். இந்த சந்திப்பில் சிவகார்த்தியனுடன் அவர் நடித்த மாவீரன் பட தயாரிப்பாளர் அருண் விஷ்வாவும் உடன் இருந்தார். சிவகார்த்திகேயன் வாழ்த்திற்கு தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்து இளையராஜா பதிவிட்டுள்ளார்.