உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது. அதேபோல இந்தியாவில் பொறுமையாக அதிகரித்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது விறுவிறுவென அதிகரித்து வருகிறது.
நான்காம் கட்டமாக தேசிய ஊரடங்கு உத்தரவு வருகிற மே 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் நிலவரத்தைப் பார்த்தால் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஊரடங்கு அமலில் இருக்கின்றபோதிலும் வீட்டிலேயே திருமணங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், பிரபல பெண் இயக்குனர் சுமனா கிட்டூர் தனது காதலரை வீட்டிலேயே எளிமையாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருமணம் செய்துகொண்டார்.
கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனரான கிட்டூர், ஸ்லம் பாலா, எடேகரிகா போன்ற வெற்றி படங்களை எடுத்திருக்கிறார். இந்நிலையில் அவர் தனது நீண்டநாள் காதலர் மற்றும் புகைப்படக் கலைஞரான ஸ்ரீனிவாஸ் என்பவரை புதுச்சேரியிலுள்ள தனது வீட்டில் திருமணம் செய்துகொண்டார். கரோனா காரணமாக யாரையும் அழைக்காமல் குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து இத்திருமணம் எளிமையாக நடைபெற்றது.