தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா. தமிழகத்தில் தேசிய விருது பெற்ற முதல் பெண் நடன இயக்குநர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார். மணிரத்னத்தின் ஆஸ்தான நடன இயக்குநரான இவர் தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் பணியாற்றி முடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் துல்கர் சல்மான், அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'ஹே சினாமிகா' படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் பிருந்தா அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய் சேதுபதி நடித்துள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. அதை தொடர்ந்து கமலின் 'விக்ரம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது.