
ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க அனிருத்தே இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதத்தில் இருந்து பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது தமிழ்நாடு - கேரளா எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி பகுதியில் தற்போது நடந்து வருகிறது. இதில் ரம்யா கிருஷ்ணனும் கலந்து கொண்டு வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை காண அவரது ரசிகர்கள் கூடுகின்றனர். அவர்களுக்கு ரஜினி கையசைத்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் மலையாள முன்னணி நடிகர் ஃபகத் ஃபாசில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இருந்து இணைந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக வேட்டையன் படத்தின் ரஜினியுடன் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் இணையவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.