நடிகர் விஜய்யை வைத்து ப்ரியமுடன், யூத் ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் வின்சென்ட் செல்வா, ப்ரியமுடன் படப்பிடிப்பு அனுபவம் குறித்து நக்கீரனுடனான முந்தைய நேர்காணலில் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் ப்ரியமுடன் படத்தில் நீக்கப்பட்ட காட்சி குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
ப்ரியமுடன் படத்தில் ஒரு சுவாரசியமான சீன் இருந்தது. ஆனால், அது படத்தில் வரவில்லை. விஜய் அந்த பெண்ணை ஏற்கனவே காதலித்திருப்பார். நண்பனிடம் சொல்லும்போது, மச்சான் அந்தப் பொண்ணு உன்னை வந்து பார்க்கணும்னு நினைப்பதற்கு முன்பே நான் அவளை லவ் பண்ணிட்டேன் என்பார். ஆனால், இல்லை இல்லை அவள் என்னைத்தான் லவ் பண்றா என்று கூறி நண்பன் ஒத்துக்கொள்ள மாட்டான். நான் உன்கிட்ட பேசுனது எல்லாமே அந்தப் பெண்ணை பற்றித்தான்டா. உனக்கே தெரியும் நான் அவளை எவ்வளவு லவ் பண்றேன் என்று விஜய் சொல்லியும் நண்பன் ஒத்துக்கொள்ளவே மாட்டான். அவனுக்காக விஜய் எவ்வளவோ உதவிகள் செய்திருப்பார். ஆனால், பெண் என்று வரும்போது அந்த நண்பன் விஜய்க்கு எதிராக மாறிவிடுவான்.
சின்ன பொறாமையில் அந்தப் பெண்ணை பற்றி நண்பன் தவறாக ஒரு வார்த்தை கூற, அவனை விஜய் அடித்துவிடுவார். அடித்ததில் தடுமாறி கீழே விழ இருந்த நண்பனை கையைக் கொடுத்து விஜய் காப்பற்ற முயற்சிப்பார். நண்பன் கீழே தொங்கிக்கொண்டிருக்க, விஜய் அவன் கையைப் பிடித்துக்கொண்டு மேலே இருப்பார். மச்சான் அவ எனக்கு வேணும்டா, ப்ளீஸ் அவளை மறந்துவிடு என விஜய் கூற, என்ன ஆனாலும் நான் அந்தப் பொண்ண விடமாட்டேன் என்று நண்பன் கூறுவான். இது நடந்து கொண்டிருக்கும்போதே அந்தப் பெண் அங்கு வருவாள். உடனே விஜய் அவன் கையை விட்டுவிடுவார். அந்தப் பெண்ணை பார்த்து சிரித்த விஜய், வீட்டில் சென்று தான் செய்ததை நினைத்து கதறி அழுவார். மிகவும் பிரமாதமான சீன் அது.
ப்ரெண்ட்ஷிப்பை வைத்து பென்கர், கர்ணன் எடுக்குறாங்க, நீ என்னடானா காதலுக்காக நண்பனை கொலை பண்றான்னு சொல்ற என்று கூறி என்னை அடிக்க வந்துவிட்டனர். கடைசியில் அந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்கிவிட்டேன். படத்தின் இறுதிவடிவம் தயாரானவுடன் படம் பார்த்த விஜய், அந்தக் காட்சியை ஏன் எடுத்துட்டிங்க என்று கேட்டார். காரணம், அவர் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து நடித்தார்.