ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி, நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில் ரஜினிகாந்த் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"ரஜினி சாரை திரையில் பார்த்துத்தான் எனக்குள்ள தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். ஏன்னா நான் கருப்பு. அந்த காலத்துல எல்லாம் கருப்பா சிவப்பாங்கிறது தான் விஷயமே. கருப்பாக இருப்பதால் எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். அப்போதுதான் கருப்பா இருக்கிற ரஜினி திரையில் மிரட்டுகிறார் என்று அவரைப் பார்த்து எனது தாழ்வு மனப்பான்மை உடைந்துவிட்டது. ஏனென்றால் ரஜினி சாருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். அவருக்கு இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். ஒருநாள் ரஜினி சார் பி.வாசுவுடைய உதவி இயக்குநர் கிருஷ்ணன் கிட்ட வீடியோ கேசட் ஒன்றை கொடுத்து கேட்கச் சொன்னார். ஆனால் அவர் அதை கேட்காமல் வாங்கி மட்டும் வைத்திருந்தார். அப்போது இது என்ன கேசட் என்று கிருஷ்ணாவிடம் கேட்டேன். அதற்கு அவர் இது ஓம் கேசட் தலைவர் கொடுத்தார் என்றார். உடனே வாங்கிட்டு போய் என் வீட்டில் கேட்க ஆரம்பித்தேன். அந்த கேசட்டில் யேசுதாஸ் குரலில் ஓம்... ஓம் என்று வரும். அதை கேட்க ஆரம்பித்த பிறகுதான் எனக்குள்ள ஏதோ ஒரு உணர்வு வருகிறது. அதன் பிறகு நான் தியானம் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு குருவும் கிடையாது, வேற எதுவும் கிடையாது. அந்த கேசட்டு தான் குரு. தலைவரே பண்றாரு என்றால் அப்போ இதுல என்னமோ இருக்கு என்று நினைத்து பண்ணினேன்.
அதனால இதிலிருந்து கிடைக்கப்பட்டதாகத்தான் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன். எனது படமாக இருக்கட்டும் அல்லது எனது வாழ்க்கையாக இருக்கட்டும் அனைத்துமே தியானத்தில் இருந்து கிடைத்ததாகவே நம்புகிறேன். அப்போ இதெல்லாம் தலைவர் ரஜினியால் தான் நமக்கு கிடைத்துள்ளது. அன்றிலிருந்துதான் அவருடைய ஆன்மிகத்தையும் ஏற்றுக்கொண்டேன். இன்று வரை அவர் மீது மதிப்பும், அன்பும் அதிகமாகவே இருக்கிறது. அதற்கு கரணம் ஆன்மீகம் தான். தலைவர் ரஜினி அரசியலுக்கு வந்து மக்களுக்கு ஆன்மிகத்தை சொல்லுவார் என்று நம்பினேன். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடக்காமல் போனது" எனக் கூறியுள்ளார்.