Skip to main content

“இது இந்திய சினிமாவிலேயே புதிதான விஷயம்...” இயக்குநர் சிம்பு தேவன் நெகிழ்ச்சி!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021

 

Chimbu Deven

 

சிம்புதேவன் இயக்கத்தில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, பிரியா பவானி சங்கர், சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'கசட தபற' திரைப்படம், கடந்த மாதம் 27ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆந்தாலஜி வகையில் 6 கதைகள் கொண்ட இப்படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு படத்தொகுப்பாளர்கள் பணியாற்றினர். இந்திய சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக வித்தியாசமான முயற்சியில் எடுக்கப்பட்ட இப்படத்தை வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்தனர். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

 

இந்த நிலையில், இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்து இயக்குநர் சிம்பு தேவன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தங்கள் அனைவரின் வாழ்த்துகளோடு 'கசட தபற' மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறது அதற்காக இப்படத்தின் இயக்குநராக நான் உங்கள் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். 'கசடதபற' படத்தை பார்த்து மகிழ்ந்து என்னையும் எங்கள் குழுவையும் தொடர்ந்து பாராட்டிய உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.

 

சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், ரேடியோ ஆகியவற்றின் மூலமாக என்னையும் எங்கள் குழுவையும் அன்புடன் தோள் தொட்டு பாராட்டிய மரியாதைக்குரிய ஊடக நண்பர்களுக்கும், விமர்சனம் செய்த நண்பர்களுக்கும் எனது நன்றிகள். தாங்கள் பாராட்டி அறிமுகப்படுத்தியதால்தான் இந்த வெற்றி எங்களுக்கு சாத்தியமானது. எங்களை மனம் திறந்து பாராட்டிய திரைத்துறை பிரபலங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

 

எங்கள் படத்தை மகிழ்வுடன் வெளியிட்டு, மக்களிடம் கொண்டு போய் சேர்த்த சோனி லைவ்-க்கும் எனது நன்றிகள். மேலும், உலக அளவில் வெளியிட்ட ப்ளாக் டிக்கெட் சினிமாஸ், டென்ட் கொட்டா மற்றும் ஏபி என்டர்டெய்ன்ட்மென்ட் ஆகியோருக்கும் எனது நன்றிகள். என் பெரும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய இப்படத்தின் நடிகர்கள், டெக்னீஷியன்கள், புரொடக்சன் டீம் அனைவருக்கும் எனது நன்றிகள். குறிப்பாக ஆறு இசையமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள் ஒன்றாக இணைந்தது இந்திய சினிமாவிலேயே புதிதான விஷயம்! ஆக இத்தனை பேரின் அன்பினாலும் பெருந்தன்மையினாலும்தான் கசடதபற உருவானது.

 

என் அன்பு நண்பர் திரு. வெங்கட் பிரபு இல்லாமல் இந்தப்படம் சாத்தியமில்லை. ஒரு இனிய இரவில் கதை கேட்டு, இதை நாமே பண்ணலாம் என்று ப்ளாக் டிக்கெட் கம்பெனியில் தொடங்கியது முதல் இன்றுவரை எல்லா தடைகளையும் தாண்டி அன்பிற்குரிய தயாரிப்பாளராக இந்த படத்தை சுமந்து வந்துள்ள நண்பர் திரு. வெங்கட் பிரபுவுக்கு என்றென்றும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள். அதேபோல் இப்படத்தை இணைந்து தயாரித்து இந்த நொடி வரை எங்களுக்கு உறுதுணையாக வழிநடத்தும் மரியாதைக்குரிய திரு. ரவீந்திரன் அவர்களுக்கும் எனது நன்றிகள். தாங்கள் அளித்த இந்த வெற்றி என்னை தொடர்ந்து உற்சாகத்தோடும். பொறுப்புணர்வோடும் பயணிக்க வைக்கும். அனைவருக்கும் மீண்டும் எனது மகிழ்வான நன்றிகள்" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்