
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட் கேர்ள். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கியுள்ளார். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் குறிப்பிட்ட சமூக பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்களும் எழுந்தது.
இதனிடையே இப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வென்றது. விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இப்படம் குறித்த ரிலீஸ் அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து சமீபத்தில் பேசிய மிஷ்கின், இப்படத்தை பேசியே வெளிவரவிடாமல் பண்ணிவிட்டோம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக்கூடாது என கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்க நிறுவன தலைவர் எஸ். ராமநாத் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்தார். அவர் பேட் கேர்ள் டீசரில் குறிப்பிட்ட சமூக பெண்களை கொச்சை படுத்தும் விதமாகவும் அவர்களின் மனதை புண்படுத்தும் விதமகவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சென்சார் போர்டு தற்போது விளக்கமளித்துள்ளது. பேட் கேர்ள் படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என்று கூறியுள்ளது. மேலும் ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சென்சார் போர்டுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படும் என்றும் சென்சார் போர்டு கூறியுள்ளது.