
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட் கேர்ள். இப்படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத்தின் இயக்கியுள்ளார். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் குறிப்பிட்ட சமூக பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்களும் எழுந்தது.
இதனிடையே இப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வென்றது. விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இப்படம் குறித்த ரிலீஸ் அப்டேட் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து டிராகன் பட விழாவில் பேசிய மிஷ்கின், இப்படத்தை பேசியே வெளிவரவிடாமல் பண்ணிவிட்டோம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக்கூடாது என கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தை எதிர்த்து மீண்டும் நீதி மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் ராம்குமார் உள்ளிட்ட மூவர் இந்த பட டீசரில் சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் கொடுத்த மனுவில், “டீசர் தற்போதும் ஆன்லைனில் உள்ளது. இதுபோன்ற காட்சிகள் குழந்தை ஆபாசம், குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம். இது பாலியல் குற்றமாகும். இந்த ஆபாச டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து மத்திய அரசு, கூகுளின் இந்திய நிறுவன அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.