Skip to main content

“குற்றவாளிகளுடன் தன்னைச் சம்மந்தபடுத்தி பேச வேண்டாம்”- நடிகை பூர்ணா வேண்டுகோள்!

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

poorna

 

மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை பூர்ணா, கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்ற பெயர் கொண்டவருடன் செல்போனின் மூல அறிமுகமாகியுள்ளார். அன்வர் அலி, கோழிக்கோட்டைச் சேர்ந்த மிகப்பெரிய நகைக்கடையின் முதலாளி என்றும் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் நடிகை பூர்ணாவிடம் தெரிவித்துள்ளார்.

 

அதன்பிறகு அன்வரின் குடும்பத்தினர் எனச் சொல்லி, அன்வரின் புகைப்படமென டிக்டாக் பிரபலத்தின் புகைப்படத்தைக் காட்டி நடிகை பூர்ணாவை திருமணம் செய்துவைக்க கேட்டுள்ளனர். அவர்கள் சென்ற பிறகு சந்தேகமடைந்த பெற்றோர், சி.சி.டி.வி. வீடியோவை ஆரய்ந்தபோது அதில் அவர்கள் வீடு, கார் ஆகியவற்றை மொபைலில் படம் பிடித்திருப்பது தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து அன்வர் அலியிடம் பூர்ணா கேட்டபோது, அவர் பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து பூர்ணாவின் பெற்றோர் கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பூர்ணாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த கேரள போலீஸார் தற்போது ரபீக், ரமேஷ் கிருஷ்ணன், சரத் சிவதாசன், அஷ்ரப் சையது முஹம்மது என்ற 4 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் அன்வர் அலி என்ற போலியான பெயரைப் பயன்படுத்தி பூர்ணாவிடம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் நால்வருக்கும் கரோனா டெஸ்ட் எடுத்த பிறகு நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து நடிகை பூர்ணா குறித்து பல வதந்திகள் பரப்பபட்டன. இந்நிலையில் அதற்கு விளக்கமளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தக் கடினமான சூழலில் எனக்கு ஆதரவளித்த நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றி. என்னுடைய விவகாரம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான உண்மைக்கு மாறான தகவல்கள் பற்றி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த மிரட்டல் கும்பலையும், முக்கியக் குற்றவாளியையும் எனக்குத் தெரியாது. குற்றவாளியோடு என்னைத் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

 

போலிப் பெயர்கள், போலி முகவரிகள், போலி அடையாளங்கள் மூலம் எங்களிடம் திருமணம் குறித்துப் பேசி எங்களை அவர்கள் ஏமாற்றியதால் எங்கள் குடும்பத்தினர் அவர்கள் மீது புகாரளிக்க முடிவு செய்தனர். நாங்கள் சட்டப்படி நடவடிக்கைக்காக போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்ததாலேயே அவர்களின் மிரட்டலுக்கு ஆளானோம். அவர்களின் நோக்கம் என்ன என்று எங்களுக்கு அப்போதும் தெரிந்திருக்கவில்லை, இப்போதும் தெரியவில்லை.

 

தற்போது, என்னுடைய புகாரை ஏற்று கேரள போலீஸார் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். எனவே, விசாரணை முடியும் வரை என்னுடைய, என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிட வேண்டாம் என்று ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

நம்முடைய நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு முடிந்ததும் ஊடகங்களை நிச்சயமாக சந்திப்பேன். என் வாழ்வின் மிகவும் கடினமான ஒரு கட்டத்தில் எனக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் நின்ற என் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

 

http://onelink.to/nknapp

 

என்னுடைய வழக்கின் மூலம், இதுபோன்ற ஏமாற்றுக்காரர்களை எதிர்த்துப் போராடும் என்னுடைய சகோதரிகள் சற்று கவனத்துடன் இருக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்