Skip to main content

"கட்சியிலிருந்து யாரும் வரவில்லை என கவலைப்பட்டேன்; ஆனால்..." - நடிகர் போண்டாமணி பேட்டி

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

actor bondamani press meet

 

பிரபல காமெடி நடிகர் போண்டாமணி, சமீபத்தில் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதன் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்பு போண்டாமணிக்கு நடிகர்கள் விஜய்சேதுபதி, தனுஷ் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் பண உதவி செய்திருந்தனர். மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் மனோபாலா உள்ளிட்ட பலர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.     

 

இந்நிலையில் போண்டாமணி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவரை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். மேலும் அதிமுக சார்பில் ரூ.1 லட்சம் தொகையை வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போண்டாமணி, "முதல்வர் சார்பில் முதல்வரின் உதவியாளர் அவ்வப்போது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். நான் உழைத்த  கட்சியிலிருந்து யாரும் வந்து சந்திக்கவில்லை என சிறிது கவலைப்பட்டேன். 

 

ஆனால் இப்போது அக்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் சந்தித்து நிதி வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றி. நடிகர் சங்கத்தினர் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தனர். நான் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவரிடமும் நடித்துள்ளேன். அவர்களும் எனக்கு உதவுவார்கள் என நம்புகிறேன். நான் மீண்டும் குணமடைந்து வரணும், மக்களை சிரிக்க வைக்க வேண்டும். " என உருக்கமாக பேசினார். மேலும் உதவி செய்த அனைவருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்தார் போண்டாமணி.

 

 

சார்ந்த செய்திகள்