Skip to main content

முப்பது வருஷங்களுக்கு முன் அவர் செஞ்சதை இப்போது பலர் தைரியமா செய்றாங்க... - வசந்தகுமார் | வென்றோர் சொல் #16

Published on 31/08/2020 | Edited on 31/08/2020

 

vasantha kumar

 

 

"என்னிடம் முதலீடு செய்ய பணம் இல்லை... ஆனால் இனி யாரிடமும் வேலை செய்யக்கூடாது என்ற உறுதி இருந்தது. அது கூடவே நம்பிக்கையும், நாணயமும் இருந்தது. சரி அதையே முதலீடு செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அந்த சிறு முதலீடுதான், மக்கள் நம்பிக்கைக்குரிய வசந்த் அன்ட் கோ சாம்ராஜ்யமாக இன்று வேறு வடிவம் கண்டுள்ளது... " என்கிறார் வசந்த் அன்ட் கோ நிறுவனரும், எழுத்தாளர், இலக்கிய ஆளுமை, பேச்சாளர், அரசியல்வாதி எனப் பன்முக ஆளுமைகொண்ட வசந்தகுமார்.

 

1978ல் தொடங்கி இன்று வரை கிட்டத்தட்ட 42 ஆண்டுகாலம் தொழில் உலகில் கொடிகட்டிப்பறந்த ஒரு தமிழ் மகன். வசந்த் அன்ட் கோ என்ற பெயரைச் சொன்னதும் அவர் நிறுவனத்தை விட அவரது முகம்தான் அநேகமாக ஞாபகம் வரும். தன்னுடைய முகத்தையே ஒரு 'பிராண்ட்'-டாக கட்டியெழுப்புவதெல்லாம் சாதாரண காரியமில்லை. தென்மாவட்டத்து மக்களுக்கே உண்டான முகச்சாயல், அதில் சிறிது புன்னகை என சுழலும் நாற்காலியில் அமர்ந்து அவர் தோன்றும் விளம்பரக் காட்சிகள் பலருக்கும் பிடித்தமானது. இன்று, அவரது மறைவின்போது தமிழக மக்கள் வெளிப்படுத்தும் அன்பு பல தொழிலதிபர்களுக்கு கிடைக்காதது. சமீபமாக தொழிலதிபர்கள் பலரும் தங்கள் தயாரிப்புகளின் விளம்பரத் தூதராக தாங்களே செயல்படும் போக்கை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பே நம்பிக்கையுடனும் தைரியத்துடனும்  தொடங்கிவைத்தவர் அவர்.  

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் வசந்தகுமார். பின்னாட்களில் சென்னையில் விஜிபி நிறுவனத்தில் 70 ரூபாய் மாதச்சம்பளத்தில் முதல் வேலை. அங்கிருந்து தொழில்நுணுக்கங்களைக் கற்று, ஒரு கட்டத்தில் வெளியேறி, தனது புதுப்புது யுக்திகளைச் செயல்படுத்தி, படிப்படியாக முன்னேறி இன்று 80க்கும் மேற்பட்ட கிளைகளுடன் வருடத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பணம் புழங்கக்கூடிய நிறுவனத்தின் நிறுவனராக உயர்ந்துள்ளார். நம்பிக்கை, நாணயம், உழைப்பு இந்த மூன்று வார்த்தைகள் தான் வசந்தகுமாரின் உதடுகள் அடிக்கடி உச்சரித்தவை. வசந்த் அன்ட் கோ சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு செங்கலையும் ஆராய்ந்து பார்த்தால் அந்த வார்த்தைகள் எவ்வளவு பெரிய வேதவாக்கு என்று புரியும். 

 

"1978ல் நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை. என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய பழைய கடையை எனக்கு கொடுத்தார். அதற்கான பணத்தை ஒரு ஆறு மாதத்தில் கொடுத்து விடுகிறேன் என்று அவருக்கு உத்தரவாதம் அளித்தேன். அங்கே ஒரு பலகை கிடந்தது, அதில் என் கடையின் பெயரை நானே எழுதி வெளியே தொங்கவிட்டேன். இப்படித்தான் என் பயணம் தொடங்கியது. கடை தயார், நான் தயார்... ஆனால் விற்பனைக்கு பொருட்கள் இல்லை. நாற்காலி மொத்த விற்பனை செய்யும் என் நண்பர் ஒருவரிடம் பேசி அவரிடம் இருந்து ஒரு ஐந்து நாற்காலி வாங்கினேன். அவர் எனக்கு 25 ரூபாய்க்கு அதை கொடுப்பார். நான் முப்பது ரூபாய்க்கு அதை விற்பனை செய்வேன். தினமும் இதேபோல 15 முதல் 20 ரூபாய் வரை எனக்கு லாபம் கிடைத்தது. அங்கிருந்து படிப்படியாக முன்னேறியது தான்...." என்கிறார் தன்னுடைய ஆரம்பகாலத் தொழிலதிபர் கனவு வாழ்கையைப் பற்றி!!!!

 

அவர் கடையை ஆரம்பித்த போது பலர் இந்த இடம் ராசியில்லாத இடம் எனச் சொல்ல, அந்த ராசியை விட்டுத்தள்ளுங்கள், என்னிடம் முகராசி இருக்கிறது நான் நிச்சயம் வெல்வேன் என்றிருக்கிறார். இந்த நம்பிக்கைதான் பின்னாட்களில் அவர் கடை 'லோகோ'-வை அவர் புகைப்படம் போட்டுப் பதித்ததற்கே உத்வேகம் அளித்திருக்கலாம்.

 

"நான் வெற்றி பெற்றிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் மக்கள் மற்றும் நான் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், நான் அவர்களிடம் காட்டும் நாணயமும்தான். ஆரம்ப கால கட்டங்களில் கடையை கொஞ்சம் விரிவுபடுத்திய பின்  நிறைய கொள்முதல் செய்தேன். அதற்கான பணத்தை ஒரு தேதியிட்டு காசோலையாக அவர்களிடம் கொடுப்பேன். அந்த தேதிக்குள் வங்கியில் என்னால் பணம் செலுத்த முடியாது. நானே அவர்களிடம் நேரடியாக சென்று விஷயத்தை கூறுவேன். பலருடைய காசோலை பணமில்லாமல் திரும்பி வந்த அனுபவம் அவர்களுக்கு நிறைய இருக்கும். நானே நேரடியாக சென்று கூறும்போது பரவாயில்லை... நேர்மையாக வந்து சொல்கிறானே என நினைத்து அவர்கள் கூடுதல் அவகாசம் கொடுப்பார்கள். ஆரம்பக்கட்டங்களில் கடைக்கு வாடிக்கையாளர் பிடித்த கதையே மிகவும் சுவாரசியமானது. என் கடைக்கு பக்கத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் மக்கள் நின்று கொண்டிருப்பார்கள். அங்கே யாரவது வயதானவர்கள் இருந்தால் பேருந்து வரும் வரை அவர்களை என் கடையில் உட்கார வைத்து அவர்களை உபசரிப்பேன். இதை அவர்கள் நெருங்கிய உறவினர்களிடம் சொல்லும்போது அதன்மூலம் அவர்கள் என் கடைக்கு வாடிக்கையாளரானார்கள். தொடக்க கால என் வாடிக்கையாளர்கள் பலர் இப்படி வந்தவர்கள் தான்....."

 

எவ்வளவு ஒரு புத்திசாலித்தனமான யுக்தி  என்று பாருங்கள். ஆங்கிலத்தில் இதை வேர்ட் ஆப் மவுத் (word of mouth) என்பார்கள். ஒரு ரூபாய் முதலீடு இல்லாமல் விளம்பரப்படுத்தும் முறைகளில் இம்முறை முக்கியமானது. வசந்த குமார் அவர்களின் இது போன்ற தனித்துவமான செயல்கள் தான் மற்ற கடைகளில் இருந்து அவரை இன்று வரை தனித்துக்காட்டுகிறது. ப்ளிப்கார்ட், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தபோது, கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டி அவர்கள் செய்த விளம்பரம், பல உள்ளூர் நிறுவனங்களின் தலையில் துண்டுவிழச் செய்தது. இதில் எதிலும் சிக்காமல் இன்று வரை அவர் கொடிகட்டிப் பறந்திருக்கிறார் என்றால் அவரது நம்பிக்கையும், நாணயமும், உழைப்பும், தனித்துவமான செயல்பாடுகளும் தான் காரணம்...! 

 

வாழ்க்கை என்பது ஒரு நதி போல... ஓயாது ஓடிக்கொண்டிருக்க வேண்டும், இடர்பாடுகள் வந்தால் பாதையை மாற்றி பாய வேண்டுமேயொழிய பயணத்தை நிறுத்தக்கூடாது என்பதை தொழில் மந்திரமாக கொண்டிருந்த வசந்த குமார், தான் வாழ்ந்த காலம் வரை வியாபார உலகில் பெரும் பாய்ச்சலாகத்தான் பாய்ந்திருக்கிறார்......!

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.