![Student confined to reform school; school operated with police protection](http://image.nakkheeran.in/cdn/farfuture/kZgr9Z06ou493FZU2IX4Wmjz6DuVtDnf4HkXnZwhaTI/1739362037/sites/default/files/inline-images/a2519.jpg)
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கடந்த 10.02.2025 அன்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது பேருந்தில் இடம் பிடிப்பதில் இரு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் கந்தகுரு என்ற மாணவரை அவருடன் படிக்கக்கூடிய சக மாணவர் ஒருவர் மார்பு பகுதியில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த கந்தகுரு உடனடியாக எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கந்தகுரு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கை பிடிப்பது தொடர்பாக இரு மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த மாணவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பரபரப்பான சூழலுக்கு பின்பு இன்று பள்ளியானது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயங்கியது. பள்ளி வளாகத்தின் நுழைவு வாயிலில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டு இன்று பள்ளியானது செயல்பட்டது.