Skip to main content

‘வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி மட்டும் வருகிறது’ - ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

the public who besieged the ration shop

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது நெடுங்குளம் கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு ரேஷன் கடை பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதில் அரிசி, சர்க்கரை, பாமாயில், பருப்பு, கோதுமை, ரவை என அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்களை மாதம்தோறும் பொதுமக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கி வர வேண்டும். ஆனால், அண்மைக்காலமாக மேற்படி பொருட்கள் இருப்பு இல்லை என்று குடும்ப அட்டைதாரர்களிடம் கடையின் விற்பனையாளர் தொடர்ந்து கூறிவந்துள்ளார்.

 

ஆனால் பொருட்கள் அனைத்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக அவர்களின் செல்ஃபோனுக்கு அவ்வப்போது குறுந்தகவல்கள் மட்டும் வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கோபமுற்ற அப்பகுதி மக்கள், நேற்று (23.11.2021) காலை அந்த ரேஷன் கடை விற்பனையாளரிடம் சென்று “பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக எங்கள் செல்ஃபோனுக்குக் குறுஞ்செய்தி மட்டும் வருகிறது. ஆனால் நாங்கள் பொருட்கள் எதுவும் உங்களிடம் வாங்கவில்லை, நீங்களும் கொடுக்கவில்லை” என்று நியாயம் கேட்டனர். இதனால் விற்பனையாளருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமுற்ற பொதுமக்கள் ரேஷன் கடையை இழுத்து மூடி பூட்டிவிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலர் பெரியசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது, “உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து பொருட்களும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றுள்ளனர். ரேஷன் கடைக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை, மற்ற நாட்களில் ரேஷன் கடை திறந்திருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. அதன்படி எந்த விற்பனையாளர்களும் தங்கள் கடைகளைத் திறந்து வைப்பதில்லை. இதுபோன்ற நிலைதான் தமிழ்நாட்டின் பெரும்பாலான ரேஷன் கடைகளில் உள்ளது. அரசு உத்தரவைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு தங்கள் இஷ்டம் போல ரேஷன் கடையை நடத்துகிறார்கள் அதன் விற்பனையாளர்கள் என்பது குடும்ப அட்டைதாரர்கள் கூறும் குற்றச்சாட்டு. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.