Skip to main content

மனைவியுடன் முறையற்ற தொடர்பு; வடமாநில வாலிபர் ஓசூரில் கொடூர கொலை!

Published on 04/10/2022 | Edited on 04/10/2022

 

north indian youth passed away in hosur

 

ஓசூர் அருகே, அண்ணியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த வடமாநில வாலிபர், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - பாகலூர் செல்லும் சாலையில் உள்ள உலியாளம் கிராமத்தில் தனியார் லேஅவுட்டில் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பீஹார் மாநிலம் மொஜப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவிஜிகுமார் (22), பங்காஜூ பஸ்வான் (25) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரையும் ஒப்பந்த பணியாளராக தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொளுவபெட்டாவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜெயக்குமார் (27) என்பவர் பணியமர்த்தி உள்ளார். 

 

சிவிஜிகுமார், பங்காஜூ பஸ்வான் ஆகிய இருவரும் உலியாளம் பகுதியில் ஒரே அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். திங்கள்கிழமை (செப். 4) அதிகாலை 2.30 மணியளவில் சிவிஜிகுமார் திடீரென்று ஜெயக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது அறையில் இருந்த பங்காஜூ பஸ்வானை காணவில்லை என்று கூறியுள்ளார். 

 

இதையடுத்து ஜெயக்குமார் அங்கு சென்றார். இருவரும் சேர்ந்து பங்காஜூ பஸ்வானை பல இடங்களில் தேடினர். அப்போது, காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பங்காஜூ பஸ்வான், அவர் தங்கியிருந்த அறையின் அருகே உள்ள முள்புதரில் சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த பாகலூர் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

முதல்கட்ட விசாரணையில், பங்காஜூ பஸ்வானை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்துக் கெலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. சந்தேகத்தின்பேரில்,  அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த சிவிஜிகுமாரை பிடித்து விசாரித்தபோது, அவர்தான் பங்காஜூவை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மேலும், தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

பீஹாரில் உள்ள சிவிஜிகுமாரின் அண்ணியுடன் பங்காஜூ பஸ்வானுக்கு முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிவிஜிகுமார் அவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சிவிஜிகுமார், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு, ஓசூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் கட்டட வேலை இருப்பதாகக்கூறி, அழைத்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (அக். 2) இரவு, ஓசூரில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.  


இதில் ஆத்திரம் அடைந்த சிவிஜிகுமார், பங்காஜூ பஸ்வானின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, முள்புதருக்குள் சடலத்தை தூக்கி வீசிவிட்டுச் சென்றிருப்பதும், தான் கொலை செய்தது தெரியாமல் இருக்க, அவரும் ஜெயக்குமாருடன் சேர்ந்து கொலையுண்ட நபரை தேடி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சிவிஜிகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்