Skip to main content

ரியல் எஸ்டேட் கும்பலில் இருந்து உடையநேரி காலணி மக்களை பாதுகாக்க வேண்டும் : கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
balakrishnan

 

புதுக்கோட்டையை அடுத்த உடையநேரி காலணி மக்களை ரியல் எஸ்டேட் கும்பலின் அச்சுருத்தலில் இருந்து பாதுகாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

 

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியம் திருமலைராய சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டது உடையநேரி பகுதி. 1974-ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய  தமிழர்களுக்கு பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் நிலம் ஒதுக்கப்பட்டது. அதனடிப்படையில் உடையநேரிப் பகுதியில் சுமார் 48 ஏக்கர் பரப்பளவில் இலங்கைத் தமிழர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. 

 

இலங்கையில் மலையப்பகுதியில் இருந்து வந்த தமிழர்களால் வெக்கை நிறைந்த இந்தப் பகுதியில் வசிக்க முடியவில்லை. இதனால், படிப்படியாக தமிழகத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் அவர்கள் குடியேறிவிட்டனர். பல ஆண்டுகளாக தரிசாகக் கிடந்த இந்த இடத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் இதில் குடியேறினர். இப்படி 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மேற்படி நிலங்களை அதிகாரிகளின் துணையோடு சில ரியல் எஸ்டேட் கும்பல் மோசடியாக ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. மோசடியான பட்டாவைக் காட்டி அடியாட்களை வைத்து மேற்படி குடும்பங்களை விரட்டும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குடிசைகளை தீவைத்துக் கொளுத்துவது, வீடுகளைச் சுற்றியுள்ள வேலிகளைப் பிரித்து எரிந்து அராஜகம் புரியவது. கொலை செய்துவிடுவதாக மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்றனர். கட்சியினரின் வலுவான தலையீட்டின் காரணமாகவும், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களின் காரணமாகவும் அங்குள்ள ஏழை, எளிய மக்கள் அப்புறப்படுத்துவது தற்காலிகமாக தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், ரியல் எஸ்டேட் கும்பலின் அச்சுருத்தல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

 

இந்நிலையில், சனிக்கிழமையன்று புதுக்கோட்டைக்கு வருகைதந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உடையநேரி பகுதிக்குச் சென்றார். பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். உடையநேரி காலணி மக்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டுமெனவும், அவர்களுக்கு நிரந்தமாக பட்டாக் கிடைப்பதற்கு உரிய வழிமுறைகளைக் செய்ய வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். 

 

இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி, விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், வி.ச மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.