
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் நடந்தது. அக்கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி செய்யும் போது கள்ளச்சாராய மரணம் தொடர்கிறது. இதைத் தடுக்க காவல் துறை, வருவாய்த் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தவிர கள்ளச்சாராய மரணம் நடைபெற்றால் அதற்கு அந்தந்தப் பகுதியில் உள்ள உள்ளளாட்சி பிரநிதிகள் தொடங்கி, சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், மாவட்ட அமைச்சர் என அனைவரும் அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதற்கான புதிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும். இது மட்டுமின்றி காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரும் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிக்கான ஆட்களை தேர்வு செய்யும்போது தகுதியுள்ளவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதுபடி முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்கி சமூக நீதியை அரசு நிலை நாட்ட வேண்டும். பரந்தூர் மக்கள் வேறு மாநிலத்துக்கு குடியேறுவதாக அறிவித்துள்ளனர். எனவே, அங்கு விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு கைவிட வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மணல் திருட்டு அதிகரித்து வருகிறது. இங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு மணல்கடத்தப்படுகிறது. இதை அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்” என்று கூறினார்.