
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கான தடை தற்பொழுது வரை நீடிக்கிறது.
நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல ஒரு பிரிவினர் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கின் உத்தரவு நகல் கிடைக்கப் பெறும் வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எச்சரிக்கையை மீறி யாரும் மேலே செல்லக்கூடாது என்பதற்காக சதுரகிரி அடிவாரம் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் சதுரகிரி கோவிலுக்கு செல்ல அதிகப்படியான பக்தர்களும் அடிவாரப் பகுதியில் காத்திருக்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு காரணத்திற்காகவும் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.