Skip to main content

டூல்கிட் விவகாரம்: 22 வயது சூழலியல் ஆர்வலர் கைது - அரசியல் தலைவர்கள் கண்டனம்!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

disha ravi

 

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இடைவிடாதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டுப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.

 

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் போராளி க்ரேட்டா தன்பெர்க், விவசாயிகள் போராட்டத்தை எப்படி நடத்தலாம் என்ற வழிமுறைகள் அடங்கிய ஆவணம் (toolkit) ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். ஜனவரி 26 ஆம் தேதி, விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில், க்ரேட்டா தன்பெர்க் பகிர்ந்த டூல்கிட் மீது, டெல்லி வன்முறைக்குக் காரணமாக இருந்ததாக வழக்குப் பதிவுசெய்தனர்.

 

இந்நிலையில் 22 வயதான இந்தியச் சூழலியல் ஆர்வலர் திஷா ரவி, க்ரெட்டா தன்பெர்க் பகிர்ந்த ஆவணத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் எனவும் அவரே அந்த ஆவணத்தை க்ரெட்டாவுடன் பகிர்ந்துகொண்டார் எனவும் அவருக்குக் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் தொடர்பு உள்ளதாகவும் கூறி டெல்லி போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.

 

திஷா ரவி, க்ரெட்டாவின் சூழலியல் பிரச்சாரக் குழுவான ‘ஃபிரைடே ஃபார் ஃபியூச்சர்’ (friday for future) அமைப்பின் இந்தியக் கிளையை உருவாக்கியவர்களுள் ஒருவர். மேலும் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்ததோடு, இணைய வழி போராட்டத்திலும் ஈடுபட்டார். மேலும் பல சூழலியல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

 

திஷா ரவியின் கைதுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்