
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 59 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகளும், தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் மராட்டியம், தமிழகம், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிக அளவில் இருந்து வருகின்றது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க அமைச்சரவையில் தீயணைப்பு மற்றும் அவசர தேவை துறை அமைச்சராக இருப்பவர் சுஜித் போஸ். இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக கரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில், கரோனா பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரின் மனைவிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டள்ளது. அவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில், மேற்குவங்கத்தில் மட்டும் 344 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.