Skip to main content

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் தேதியில் மாற்றம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published on 31/08/2024 | Edited on 31/08/2024
 Election Commission announcement on Change in Haryana Assembly Election Date

10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதேபோல் 90 தொகுதிகளை மொத்தமாக கொண்ட ஹரியானா மாநிலத்திற்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. 

இது குறித்து கடந்த 16ஆம் தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய ஆணையர் ராஜ்குமார் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், அக்டோபர் 1ஆம் தேதி ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என தெரிவித்திருந்தார். மேலும், இரண்டு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த தேர்தல் அக்டோபர் 5ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹரியானா மாநிலத்திலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தெரிவித்திருந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளது. 

அக்டோபர் 1ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் தேதியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. குரு ஜம்பேஸ்வரரின் அசோஜ் அமாவாசை திருவிழாவையொட்டி ஹரியானா தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்