Skip to main content

7 ஆண்டுகளுக்கு முன் தந்தையிடம் செய்த சத்தியத்தை காப்பாற்றிய உத்தவ் தாக்கரே!

Published on 27/11/2019 | Edited on 27/11/2019


1960-களின் மத்திய பகுதி, மராத்திய மக்கள் அப்போதைய ஆளும் கட்சியான காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்த நேரம். சுதந்திரத்துக்குப் பிறகான இந்த 15 ஆண்டுகளில் மராட்டியர்களுக்கு வேலை வாய்ப்பில் போதிய முக்கியத்துவத்தை மாநில அரசு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி ஆளான நேரம் அது. அப்போது 'மண்ணின் மைந்தன்' என்ற கோஷத்தோடு அறிமுகமாகிறார் பால் தாக்கரே. மும்பையில் 'மார்மிக்' என்ற மராத்தி வார இதழை நடத்தி வந்த இந்த கார்ட்டூனிஸ்ட் மராத்தியர்களின் உரிமைகளுக்காக செயல்படத்தொடங்குகிறார். மராத்தியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை ஆளும் அரசு கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கூறிய அவர், அதற்குக் காரணம் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு இங்கே அடைக்கலம் கொடுத்ததுதான் என்ற பகீர் குற்றச்சாட்டை மராத்தி மக்கள் முன் வைத்தார். இது மக்களிடம் பேசு பொருளான சமயம், இதுதான் நேரம் என்று காத்திருந்த அவரின் ஆதரவாளர்கள் குஜராத்தி மற்றும் தென் இந்திய மக்களின் மீது சரமாரி தாக்குதல் நடத்தி தாங்கள்தான் மராட்டியர்களின் சிவாஜி என்று நிறுவ முயன்றனர். அதனை பொதுமக்களில் குறிப்பிட்ட பகுதியினர் ஏற்றுக்கொள்ளவும் செய்தனர். 1966ம் ஆண்டு சிவசேனா ஆரம்பிக்கப்படுகிறது. சிவசேனா ஆரம்பிக்கப்பட்ட இந்த 50 ஆண்டுகால கட்டத்தில் முதல் முறையாக ஒரு புதிய சூழ்நிலையை அக்கட்சி சந்தித்து வருகிறது.


 

t



சிவசேனா தொடங்கப்பட்ட நாளில் இருந்து தற்போது, சில தினங்களுக்கு முன்புவரை இந்துத்துவ சிந்தாந்தங்களோடு பயணித்த அந்தக் கட்சி முதல் முறையாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் குறைபட்ச செயல்திட்டத்துடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளது. தங்களின் ஐம்பது ஆண்டுகால காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை மறந்து அவர்களுடன் தற்போது நட்புக்கரம் நீட்டியுள்ளது. காரணம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். முதல்வர் பதவி தர மறுத்ததால் பாஜகவுடன் தங்களின் கூட்டணியை சிவசேனா முறித்தது. அதையும் தாண்டி ஆட்சி அமைப்பதற்காக யாரை எதிர்த்து தேர்தலில் நின்றதோ அவர்களிடமே ஆட்சி அமைக்க ஆதரவும் கேட்டது. யாரை அப்பறப்படுத்த கட்சி ஆரம்பித்ததாக இத்தனை ஆண்டுகாலம் கூறிவந்தார்களோ அவர்களிடமே ஆட்சி அமைக்க ஆதரவு கோருவது என்பது காலத்தின் கோலம் என்றுதான் சொல்கிறார்கள் ஜனநாயகவாதிகள். சிவசேனாவுக்கு முதல்வர் பதவி என்பது புதில்ல, ஏற்கனவே 1995ம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவுடன் இணைந்து முதல்வர் பதவியை கைப்பற்றியது சிவசேனா. அக்கட்சியை சேர்ந்த மனோகர் ஜோஷி முதல்வாராக்கப்பட்டா்.


 

t



தான் எதற்காக கட்சி ஆரம்பித்தோமோ அதனை சாதித்த மகிழ்ச்சியில் இருந்த தாக்ரே குடும்பத்தினர், அதனை தொடர முடியாமல் போனது நீண்டகால வருத்தம். மாநிலத்தில் இரண்டு இலக்கத்தில் வெற்றி பெறும் வல்லமையை பெற்று இருந்தும் கடந்த பல ஆண்டுகாலமாக அக்கட்சியை சேர்ந்த எவரும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. இது ஏக்கமாக மனதில் இருந்து வந்த சமயத்திலேயே பால் தாக்கரே 2012ம் ஆண்டு மறைந்து போனார். மன்னனுக்குப் பிறகு இளவரசர் என்ற அடிப்படையில் அக்கட்சிக்கு தலைவரானார் உத்தவ் தாக்கரே. அப்பாவை விட வலிமையாக செயல்பட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அதற்காக தீவிரமாக உழைத்தார். அவரின் பத்தாண்டுகால உழைப்புக்கு நடந்து முடிந்த தேர்தலில் நல்ல அரசியல் அறுவடை செய்யலாம் என்ற நிலையில், சிறு பங்கை வேண்டுமானால் தருகிறேன் ஆனால் நிலத்தில் கைவைக்காதே என்று கம்பு சுத்தியது பாஜக. 'அப்பாவிடம் (பால் தாக்கரே) நான் சிவசேனா கட்சியை சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவேன் என்று அவர் இறப்பதற்கு முன் உறுதி கொடுத்துள்ளேன், எனவே உயிரே போனாலும் இந்த முறை சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர்' என்று பாஜகவுக்கு எதிராக கொந்தளித்தார் உத்தேவ் தாக்கரே. 'சட்டமன்ற உறுப்பினர்களே இல்லை என்றாலும் ஆட்சி அமைக்கும் வல்லமை படைத்த நம்மிடம் இவர் வீம்பு செய்கிறாரே' என்று ஒரு புறம் அமித்ஷா தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், அவர்களிடம் சிபிஐ படம் எடுபடாது. அஜித் பவாரை வைத்து செய்த அரசியலும் எடுபடவில்லை.

மராட்டிய அரசியல் சூழ்நிலை இப்படி இருக்க, முதல் முறையாக கைக்கட்டி நிற்கிறார்கள் பாஜக தலைவர்கள். 6 ஆண்டுகாலம் இந்தியாவில் அதிரடி அரசியலை செய்துவந்த பாஜகவுக்கு அடுத்துவரும் நாட்கள் முக்கியமானவை மட்டுமல்ல, தங்களை பல சமரசங்களுக்கு தயார்படுத்தும் நாட்களும் கூட!



 

 

 
News Hub