கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த கனமழை காரணமாக வயநாடு மாவட்டதிலுள்ள முண்டக்கை என்ற இடத்தில் நேற்று ( 30.07.2024) நள்ளிரவு 1 மணிக்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ள சூரல்மலை என்ற இடத்திலும் அதிகாலை 4 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இவ்விரு இடங்களிலும் தொடர்ச்சியாக மீட்பு பணிக்குழு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த இரு நிலச்சரிவுகளில் தற்போது வரை 146 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் 98 பேர் காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கேரளாவையே உலுக்கியுள்ள நிலையில் திரைப்படங்களின் அப்டேட்டுகள் மற்றும் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டோவினோ தாமஸ் நடித்துள்ள ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டது. மேலும் விஷக் நாயர் மற்றும் மஞ்சு வாரியர் நடித்த 'ஃபுடேஜ்' படம் ஆகஸ்ட் 2 வெளியாகவிருந்தது. இப்பேரிடர் காரணமாக இப்படம் தாமதமாக வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. அதேபோல மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம், கேரள தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து நடத்த இருக்கும் விருது நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே மலையாள முன்னணி நடிகர்களான ப்ரித்விராஜ், “தொடர்ந்து கனமழை மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றுங்கள். முடிந்தவரை பயணத்தைத் தவிர்துவிடுங்கள். தவறான செய்திகளை பரப்பாமல் கவனமாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் பாதுகாப்பிற்காக அவசரகால உதவி எண்களையும் பகிர்ந்துள்ளார்.