ஜீ5 வில் ஒளிபரப்பான "ஃபிங்கர்டிப்" க்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தற்போது இரண்டாவது சீசனுடன் மீண்டும் வந்துள்ளனர். இந்த இரண்டாவது சீசன் ஜூன் 17, 2022 முதல் ஜீ5 தளத்தில் ஒளிபரப்பாகிறது.
இந்த தொடரில் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா, அபர்ணா பாலமுரளி, வினோத் கிஷன், கண்ணா ரவி மற்றும் ஷரத் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, ராஜா கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), மாரிமுத்து மற்றும் ஹரிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஃபிங்கர் டிப் இரண்டாவது சீசன் ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர் ஆகும். டிஜிட்டல் தளம் மற்றும் டிஜிட்டல் யுகத்தின் சக்தி, நம் விரல் நுனியில் எப்படி இருக்கிறது என்பதைச் சுற்றி வரும் ஒரிஜினல் சீரிஸ் இது. டிஜிட்டல் உலகில் முக்கியமாக இருக்கும் ஆபத்துகளை இந்தக் கதை ஆராய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த தொடர் ஒரு பக்க சார்பான கருத்துடன் மட்டும் நிற்காமல், தொழில்நுட்பம் என்பது கத்தி போன்ற ஒரு கருவி என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. மேலும் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அதன் விளைவுகள் இருக்கும். மற்ற தொழில்துறை அல்லது புதுமையான கண்டுபிடிப்புகளை போலவே, 'டிஜிட்டல் தளம்’ என்பது தனிநபர்களின் கருத்துகளின் அடிப்படையில் எண்ணற்ற வரையறைகளைக் கொண்டுள்ளது என்பதை இந்த தொடர் சொல்கிறது.
ஃபிங்கர்டிப் சீசன் 2 , ஆறு கதாபாத்திரங்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. சிலர் வேட்டையாடுபவர்கள் மற்றும் சிலர் டிஜிட்டல் குற்றங்கள் அல்லது டிஜிட்டல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
ஷிவாவகர் ஸ்ரீனிவாசன் ஃபிங்கர்டிப் இரண்டாவது சீசனை இயக்கியுள்ளார், பிரசன்னாவின் ஒளிப்பதிவு, தீன தயாளனின் இசை, மற்றும் G.K. பிரசன்னா உடைய படதொகுப்பில் இந்த தொடர் உருவாகியுள்ளது. Film Crew Productions சார்பில் அருண் குமார் மற்றும் ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஆகியோர் ஃபிங்கர்டிப் சீசன் 2 தொடரை தயாரித்துள்ளனர்.