Skip to main content

மிரட்டல் வில்லனை அறிமுகப்படுத்திய கே.ஜி.எப்-2 படக்குழு! 

Published on 29/07/2021 | Edited on 29/07/2021
jftjfjf

 

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத் திரையுலகில் 2018இல் வெளியான படம் ‘கே.ஜி.எஃப்: சேப்டர் 1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் வேட்டை தென்னிந்திய சினிமா வட்டாரங்களை ஆச்சரியப்பட வைத்தது. இப்படத்தின் மேக்கிங், பவர்ஃபுல் வசனங்கள், ஆக்சன் காட்சிகள் ஆகியவை தியேட்டர்களை அதிரச் செய்தன. இதனால் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 

இதையடுத்து ஆரம்பித்த ‘கே.ஜி.எஃப்: சேப்டர் 2’வில் ஹீரோ யாஷுடன் வில்லனாக சஞ்சய் தத், முக்கிய பாத்திரத்தில் ரவீனா டாண்டன் போன்ற பாலிவுட் பிரபலங்களும், நடிகர் பிரகாஷ்ராஜும் முக்கியக் கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியான ‘கே.ஜி.எஃப்: சேப்டர் 2’ படத்தின் டீசர் 200 மில்லியன்களுக்கு மேல் பார்வையிடல்களைப் பெற்றுள்ளது. தென்னிந்திய சினிமாவில் இதுவும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவை எடுத்துக்கொண்டால் பாலிவுட் படங்களுக்குத்தான் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்தனர். 

 

ஆனால், இதனை மாற்றிக்காட்டிய முதல் தென்னிந்திய படம் ‘பாகுபலி’. இப்படத்திற்குப் பிறகு மீண்டும் அதே போன்றதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘கே.ஜி.எஃப்: சேப்டர் 2’. ஒரே நேரத்தில் பல மொழிகளில் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நேரத்தில் சஞ்சய் தத்தின் பிறந்தநாளான இன்று அவரின் கதாபாத்திரமான அதீரா கதாபாத்திரத்தின் தோற்றம் அடங்கிய போஸ்டரை கே.ஜி.எப்-2 படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்