Skip to main content

"இந்த முறை படத்திற்கு பிரச்சனை வந்தால் நான்..." - கமல் ஆவேசம் 

Published on 12/06/2018 | Edited on 12/06/2018
kamal


பெரும் எதிர்பார்ப்பில் இருந்த விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலர் ஒரு வழியாக நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகநாயகன் டியூப் என்ற யூடூப் சேனல் வாயிலாக நேரடி ஒளிபரப்பின் மூலம் கமல்ஹாசன் வெளியிட்ட இந்த ட்ரைலரை இதுவரை 3 மில்லியனுக்கு மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். மேலும் இதன் தமிழ் ட்ரைலரை ஸ்ருதிஹாசனும், ஹிந்தி ட்ரைலரை அமீர் கானும், தெலுங்கு ட்ரைலரை ஜுனியர் என்.டி.ஆரும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

 

 


இதை தொடர்ந்து டிரைலர் ரிலீசுக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்து நடிகர் கமல்ஹாசன் பேசியபோது... "விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர் எல்லோருக்கும் பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல. முதல் பாகம் தாமதத்துக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல. தடைகளை வென்று வருகிறது. இதில் நடித்த நாசர், சேகர் கபூர், ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோருக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் காஸ்ட்யூம் பணியை சிறப்பாக செய்து விட்டுபோன கவுதமிக்கும் நன்றி. விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளோம். ஐந்தாறு டைரக்டர்களும் இதில் நடித்துள்ளனர். எனது அண்ணன் சந்திரஹாசன் அவருக்குள்ள சாராம்சத்தை எனக்குள் இறக்கிவிட்டு போய் இருக்கிறார். அவர் இடத்தை நிரப்ப எனக்கு இப்போது நிறைய சகோதரர்கள் கிடைத்து இருக்கிறார்கள். ‘விஸ்வரூபம் 2’ படம் பல்லாயிரம் பிரிண்ட்களுடன் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஆகஸ்டு 10ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும். இதில் நானும் பாடல் எழுதி இருக்கிறேன்.

 

kamal

 

விஸ்வரூபம் படத்துக்கு வந்ததுபோல் இந்த படத்துக்கு எதிர்ப்பு வராது என்று நினைக்கிறேன். முதல் பாகத்துக்கு வந்த எதிர்ப்பு கூட மாறுவேடத்தில் வந்ததுதான். அந்த எதிர்ப்பு அவர்கள்பால் இருந்து வரவில்லை என்று பிற்பாடு நிருபணம் ஆனது. அது அரசியல். இந்த படத்துக்கும் அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்தால் நான் அரசியல்வாதியாக அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறேன். எனது அரசியல் பிரவேசத்தை முன்வைத்து இந்த படம் வரவில்லை. முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும் சில முன்கதைகளுடன் இரண்டாம் பாகம் வருகிறது.

 

 


சபாஷ் நாயுடு, இந்தியன் 2 படங்களும் அடுத்தடுத்து தயாராகி வெளிவரும். நான் அரசியலுக்கு வந்து விட்டதால் இனி படங்களில் நடிப்பது குறையும். இரண்டாம் பாகம் படத்தில் அதிகம் பேச்சுகள் இடம்பெறவில்லை. அதிரடி சண்டை காட்சிகளும், உணர்வுப்பூர்வமான விஷயங்களும் அதிகம் இருக்கும்" என்று கமல்ஹாசன் கூறினார். விஸ்வரூபம் 2 படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகயிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

Simbu became a doctor ...!

 

தமிழ் சினிமாவில் இயக்கம், நடிப்பு, இசை என பன்முகத்திறமை கொண்டவர் டி.ராஜேந்திரன். அவரது மகனான சிலம்பரசனும் திரைப்பட இயக்கம், நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்டவராகவே இருந்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரை படங்களில் நடித்து வருகிறார். மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் அவரது திரைப் பயணத்தில் முக்கிய படங்களாகும். அதேபோல் ஜல்லிக்கட்டு, காவிரி பிரச்சனை போன்ற விஷயங்களிலும் தைரியமாகக் கருத்துக்களை முன்வைத்தார். அண்மையில் அவர் நடித்திருந்த 'மாநாடு' திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சன ரீதியாக வெற்றியையும் பெற்றிருந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டது. 'வெந்து தணிந்தது காடு' படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷின் வேல்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற விழாவில் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது அவரது ரசிகர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்!!

Published on 06/01/2019 | Edited on 06/01/2019

சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த  இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,

 

SEEMAN

 

உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.

 

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது.  தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.

 

எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன்.  அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன்.

என்றார் நகைச்சுவையாக.