Skip to main content

மறைந்த இயக்குநர் சித்திக் வீட்டிற்கு சென்ற சூர்யா

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Actor Suriya visits Siddique’s family in Kochi, offers condolences

 

தமிழில் 'ப்ரண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', 'சாது மிரண்டா', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மலையாள இயக்குநர் சித்திக் கடந்த 8ஆம் தேதி காலமானார். நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்சனைக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதையடுத்து சூர்யா, கேரளாவில் கொச்சியில் உள்ள சித்திக்கின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்குள்ள குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். சூர்யாவுடன் இயக்குநர் ராஜசேகரும் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

முன்னதாக, ட்விட்டரில் சித்திக்கின் மறைவுக்கு, "சித்திக் சார் இயல்பாகவே ஒரு ஊக்கமளிக்கும் மனிதர். படப்பிடிப்பின் போது நடிப்பில் சிறிய முன்னேற்றம் செய்தாலும் நடிகர்களைப் பாராட்டுவார். படப்பிடிப்பைத் தாண்டி எடிட் செய்யும் போதும், எனது நடிப்பு குறித்த தனது அபிப்ராயங்களை அன்புடன் தெரிவிப்பார். ப்ரண்ட்ஸ் படம் பண்ணும்போது அவர் புகழ்பெற்ற மூத்த இயக்குநர். ஆனால் அவர் தனது நட்பு அணுகுமுறையால் படப்பிடிப்பின் போது நம் அனைவரையும் சமமாக நடத்துவார்" என நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

‘மனிதர் உணர்ந்து கொள்ள...’ - மஞ்சும்மல் பாய்ஸின் ஓடிடி அப்டேட்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
manjummel boys ott update

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது. அது தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது. 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினார். இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து ரஜினி, தனுஷ், விக்ரம், சித்தார்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் இயக்குநர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டியிருந்தனர்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் இப்படம் பேசுபொருளாகவே மாறி, இப்படத்தின் தாக்கத்தினால் சுற்றுலா விரும்பிகள் பலரும் குணா குகையை நோக்கிப் படையெடுத்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனை படைத்தது. இதையடுத்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு கடந்த 6ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. மே 5 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.